சன் டிவியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு யாகவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் அடித்துக் கொள்ளும் நிகழ்வை காட்டிய வரை சிவசங்கர் பாபாவைப் பற்றி ஏதும் தெரியாது எனக்கு.
பின்னாளில் நடிகர் விவேக், மயில்சாமியோடு சேர்ந்து அந்த நிகழ்வை அச்சு அசலாக பகடி செய்து நகை செய்திருந்தபடியால் அது திரும்பவும் நினைவில் வந்தது. பல ஆண்டுகள் பெங்களூருவில் வாழ்ந்ததால் அவ்வளவுதான் அவரைப் பற்றித் தெரியும்.
சிவசங்கர் பாபாவைப் பற்றி இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை நான், பலர் துதித்துப் பின்பற்றுகிறார்கள், அவர் ஒரு பள்ளி நடத்துகிறார், நீலாங்கரையில் எங்கோ இருக்கிறார் என்பனவற்றைத் தாண்டி.
ஊடகங்களுக்கு எப்போதும் ஆன்மீகவாதிகள் என்றால் இளக்காரம், எப்போதும் சந்தேகத்தோடே பார்ப்பார்கள், சமயம் கிடைத்தால் கிழித்து டிஆர்பி ஏற்றி கல்லா கட்டி விடுவார்கள் என்பதை நிறைய பார்த்துள்ளதால் கூடுமானவரையில் ஊடகங்களின் அடிப்படையில் பார்க்க விரும்புவதில்லை எவரையும்.(அவருக்கு ‘டம்மி பாபா சிவசங் கரன்’ என பெயர் சூட்டி விட்டன ஊடகங்கள் இன்று)
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் டெல்லிக்குப் போய் கைது செய்து கொண்டு வந்தார்கள் அவரை. விசரணைக்கு எடுக்க வேண்டும் என்ற நிலையில், ‘நெஞ்சுவலியால் சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி!’ என்று செய்தி வருகிறது.
இதுவரையில் எந்த கருத்தும் கொண்டிராத எனக்கு, இந்த ‘திடீர் நெஞ்சுவலி, மருத்துவ மனை அனுமதி’ தவறாகப் படுகிறது.
பார்ப்போம்!
– பரமன் பச்சைமுத்து
19.06.2021