‘உறவினர்களை நண்பர்களை சந்திக்கும் போது வழக்கமாக உதிர்க்கும் கதாநாயக புன்னகை தற்போது முதல்வரிடம் காணப்படவில்லை. அவர் முள் கிரீடம் சுமந்து அல்லும் பகலும் உழைக்கிறார்’ என்று புதிதாக பொறுப்பேற்றிருப்கும் அமைச்சர் புதிதாகத் தொடங்கப்பட்ட சட்டப்பேரவையில் தனது உரையில் பேசியிருப்பது ஊடகங்களில் வந்தது.
நீட் பற்றியும், கொரோனா கட்டுப்படுத்தல் பற்றியும் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும், முதல்வர் ஸ்டாலினும், மாசுவும், துரை முருகனும் விவாதிப்பது ஒரு குடிமகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கேள்விகள் வைத்தல், சுட்டுதல், விளக்கம் என எதிலும் சரியான மாண்பு காணப்படுகிறது. இதுவே தொடர வேண்டும். தனித மனித துதிபாடுகள் தவிர்க்கப்படுதல் மேலும் மாண்பைக் கூட்டும்.
அந்தக் கட்சியில்தான் போற்றி்செய்தார்கள், இல்லை இந்தக் கட்சியில்தான் துதி செய்தார்கள் என மாறிமாறி பழையனவற்றை காட்டிக் குற்றம் சாட்டுவதில் பயன் இல்லை. இப்போது களையலாமே இதை என்பது என் போன்ற ஆரோக்கிய அரசியலை விரும்புவோர் விரும்புவர்.
நிறைய மாற்றங்களை கொண்டு வர முனையும் ஸ்டாலின் அவர்களின் அரசு இதையும் செய்யலாம். தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்ட ஆளுயர படத்தை, ‘இது கட்சி அலுவலகம் அல்ல, அரசு தலைமைச் செயலகம்!’ என்று தவிர்த்த முதல்வர், இதையும் செய்வாரென்றே எண்ணுகிறேன்.
– மணக்குடி மண்டு
24.06.2021