முதல், இரண்டு, மூன்று என மூன்று இடத்தையும் பிடித்து அசத்திய ஜமைக்கா வீராங்கனைகளின் ஓட்டத்தை பார்த்தவன், நீரஜ் சோப்ராவின் அதகளத்தை தவற விட்டு, மறு ஒலிபரப்பிலேயே பார்த்தேன்.
சிரஞ்சீவி படங்களில் பார்ப்பதைப் போன்ற ஒரு காட்சியை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டிவிட்டார் நீரஜ் சோப்ரா. தான் பணிபுரியும் ராணுவத்திற்கும் மொத்த இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்து இளைஞர்களின் உண்மை நாயகனாக உயர்ந்து நிற்கிறார் வீரர் நீரஜ் சோப்ரா.
ஒலிம்ப்பிக்ஸில் 7 பதக்கங்கள் என்பதை கொண்டாடுகிறேன் எனும் வேளையில் இந்திய ஹாக்கி மகளிர் அணி தோல்வியுற்றதை வாரணாசியில் வீராங்கனை வந்தனாவின் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் உயர்சாதியினர் சிலர் என்ற செய்தியையும் படிக்கிறேன். என்று தீரும் இந்த வகுப்புவாத பேத பேதமைகள்? அடேய், அளவேயில்லீங்களாடா?!
ஒரு புறம் தோல்வியுற்ற இந்திய ஹாக்கி மகளிரணியோடு செல்லிடப்பேசியில் இந்தியப் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் வீராங்கனை வந்தனாவின் வீட்டின் முன் இதைச் செய்கிறார்கள் சில விஷமிகள்.
பிவி சிந்து இன்னும் அதிகமாக கொண்டாடப்பட வேண்டியவர்.
இங்கே, நன்றாக விளையாடுபவர்களே பெருமளவு போராடியே ஒலிம்பிக்ஸுக்கு வர வேண்டியுள்ளது என்ற நிலையிலிருந்து ஒலிம்பிக்ஸை நோக்கியே வீரர்கள் வீராங்கனைகள் உருவாக்கப்படுகிறார்கள் எனும் நிலைக்கு நாம் வர வேண்டும். ஒலிம்ப்பிக்ஸ் என்றாலே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம்தான் என்பதை மாற்றி சீனா மேலெழுந்து வந்ததைப் போல, இந்தியாவும் பல நிலைகளுக்கு மேலெழும்.
நடக்கட்டும்!
– பரமன் பச்சைமுத்து
09.08.2021
#TokyoOlympics
#Olympics