சி பொன்னையன் முன்பு செய்ததைப் போல, ஆந்திர, பஞ்சாப் மாநிலங்கள் வழியில் வெள்ளை அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக நிதியமைச்சர்.
ஒவ்வொருவர் தலை மீதும் 1.10லட்சம் கடன் உள்ளது, மின்சார வாரியம், சென்னைக் குடிநீர், தமிழ்நாடு குடிநீர் வாரியங்கள், அரசுப் பேருந்து கழகம் ஆகியவை பெரும் நட்டத்தில் உள்ளது என்கிறது அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை.
நேற்று ‘உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கூடாது’ என்று நீதி மன்றம் போய் நின்று விட்டு, இன்று உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் கோடிகள் நட்டம் என்பது நியாயமில்லையே என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. வந்த வருமானம் மற்றும் வாங்கிய கடன்கள் எல்லாம் முதலீடுகளாக உள்ளன என்கிறார் ஈபிஎஸ்.
சொத்து வரி, போக்குவரத்துக் கட்டணங்கள் போன்றவை உயரலாம் என்கிறார்கள் பொருளாதாரம் அறிந்தவர்கள்.
வெள்ளை அறிக்கைப் பற்றியோ, அதிலுள்ள அம்சங்கள் பற்றியோ, இதிலுள்ள அரசியல் பற்றியோ நமக்கு அதிகம் தெரியாது. ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. ஆனால், ‘இதுதான் நிலைமை, இங்குதான் நிற்கிறோம்!’ என்று வெளிப்படையாக அறிவிக்கை தந்தது நாம் எங்கிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும். அந்த ஒரு சங்கதிக்காக இதை வரவேற்கிறேன்.
மீதியை பட்ஜெட்டில் பார்ப்போம்!
– மணக்குடி மண்டு
10.08.2021