சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் அதே கையோடு, சுதந்திரத்தின் 75வது ஆண்டை போற்றும் வகையில் காமராஜர் – சிவானந்தா சாலையில் நினைவுத்தூண் ஒன்றை திறந்து வைத்தது இப்போதைய அரசியல் சூழலில் முக்கியமானது என எண்ணுகிறேன்.
‘இது வெறும் கல்லாலும் சிமெண்ட்டாலும் கட்டப்பட்டதல்ல, நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம், சதை, எலும்பினால் கட்டப்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறோம்’ என்று பேசி, ‘150 ஆண்டுகளுக்கு முன்பு போராடிய பூலித்தேவன், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், சந்மரலிங்கம், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், வஉசி, பாரதி, சுப்பிரமணிய சிவா, கேபி சுந்தராம்பாள்…’ என பெரும் பட்டியலைச் சொல்லி ‘தமிழ்நாட்டுத் தியாகிகளின் சுவாசத்தைக் கொண்டு கட்டப்பட்டது இந்தத்தூண்’ என்று பேசியிருக்கிறார். இது மிக மிக நல்லது.
‘ஜெய்ஹிந்த்’ என்பதே அருவருப்பான வார்த்தை போல எதிர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்திய ஒருமைப்பாட்டோடு கலந்து நிற்கும் வகையில், இத்தனை தமிழ்நாட்டு தியாகிகள் பாடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்லியிருப்பது, ‘தேசியக் கொடி ஏற்றுவதோடு தமிழகமெங்கும் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்யவும்!’ என்று கட்டளையிட்டிருப்பதையும் இந்த சூழலில் முக்கியமானவையாகப் பார்க்கிறேன்.
நாம் தமிழகத்தை சேர்ந்த இந்தியர்கள் என்ற எண்ணம் அடுத்த தலைமுறைக்கு ஊட்டப்படும்.
வாழ்க பாரதம்!
– மணக்குடி மண்டு
16.08.2021