அவை தொடங்குகிறது. அவைத் தலைவர் பேசத் தொடங்குகிறார். அதற்குள் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து வேறொரு பிரச்சினை பற்றி பேச வேண்டும் என்று அனுமதி கேட்கிறார். ‘நிச்சயம் நேரம் ஒதுக்கப்படும். அதற்கு முன்பு இந்த முறைமைகளை முடித்து விடுவோம். உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்’ என்கிறார். ‘முடியாது, இப்பவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்!’ என்று கூச்சலிடுகிறார். ஏற்கனவே திட்டமிட்டு தயாரித்துக் கொண்டு வந்திருந்த பதாகைகளோடு காத்திருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குதித்து வந்து அவையின் நடுவே கத்தி கூச்சலிட்டு அமளியில் ஈடுபடுகின்றனர்.
இது சரியா? சபையை நடக்க விடுவதுதானே மாண்பு. விவாதம் செய்து கேள்வி கேட்டு திக்குமுக்காட செய்வதுதானே எதிர்க்கட்சி செய்ய வேண்டிய ஆரோக்கிய அரசியல். சபையை நடத்த விடாமல் செய்வதா?
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியும் அவரது கட்சியினரும் இதை இன்று சட்டசபையில் செய்தனர்.
இதை, இன்று சட்டசபையில் செய்த எடப்பாடியின் எதிர்க்கட்சி, நேற்று பாராளுமன்றத்தில் செய்த எதிர்கட்சிகள்… இரண்டின் அணுகுமுறையும் தவறானவையே.
வெளிநடப்பாவது பரவாயில்லை, அமளி செய்து சபை நடக்க விடாமல் தடுப்பது பெருந்தவறு.
பாராளுமன்றம் என்றதும் மோடி, சட்டசபை என்றதும் திமுக என்று ‘ஐயோ… அதுவும் இதுவும் ஒண்ணு இல்லையே!’ ‘அது நாட்டை உலுக்கற பிரச்சினை, இது கொடநாடு கொலை விசாரணை!’ என்று முட்டுக் கொடுக்கும் அரசியல் ‘ஞாயமார்கள்’ பொங்கி எழுவார்கள். அவர்கள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அவர்களுக்கான பதில், ‘ஆமாம், நேரம் தரப்படும் என்று அவைத்தலைவர் சொல்லியும் கேளாமல்’ ஏற்கனவே தயாரித்துக் கொண்டு வந்திருந்த பதாகைகளை தூக்கிக் கொண்டு நடுவில் நின்று சபையை நடத்த விடாமல் செய்வது என்ற சங்கதியில் இரண்டும் ஒன்றுதான். அது தவறுதான். எந்தக் கட்சியாக இருந்தாலும் தவறுதான்!’
– மணக்குடி மண்டு
18.08.2021