‘பிபி சூட் அணிந்திருக்கிறீர்களா?’
விமானப் பயணத்தில் நடைவழிக்கு அருகே அமர்ந்திருப்பவர்களுக்கும்,இரண்டு பயணிகளுக்கு இடையே அமர்பவர்களுக்கும் ‘அணிந்தே ஆக வேண்டும்!’ என்று கட்டாயமாக கொடுக்கப்படும் ‘ஒரு முறை பயன்படுத்தி எறிந்து விடக் கூடிய கவச உடை’
ஒரே வீட்டிலிருந்து கணவனும் மனைவியுமாக வந்தாலும், தந்தையும் மகளுமாக வந்தாலும் அடுத்தடுத்து அமரும்போது ஒருவர் பிபி சூட் அணிய வேண்டும் என்பது அவர்களுக்கே சிரிப்பை வரவழைக்கும் கிறுக்குத்தனமான நெறிமுறைதான். நடைமுறை சிக்கல்களுக்காக செய்துதான் ஆகவேண்டியுள்ளது.
தொடக்க காலங்களில் சலசலக்கும் காற்றுபுகா வியர்க்க வைக்கும் பாலிதீன் வகை உடைகளாக வந்த பிபி சூட், இப்போது சலூன்களில் நம் மீது போர்த்தப்படும் பயன்படுத்தி எறியப்படும் துணிகளில் கிட்டத்தட்ட ‘டிஷ்யூ பேப்பர்’போல வருகிறது. காற்றாட அணிய முடிகிறது.
எல்லாருக்கும் ஒரே சைஸ்தான். தொளதொளவென்றுதான். விமான பணிப்பெண்களுக்கு மட்டும் அவரவர்க்கான சரியான அளவில் பிடித்த மாதிரி, அவர்களுக்கு பிடித்த மாதிரி. மருத்துவர்கள் அணிவதை போல பின்பக்கத்தில் வைத்து ஒட்டிக் கொண்டு நாடாவை இழுத்துக் கட்டிக்கொண்டு அலைகிறார்கள் அவர்கள். இந்த பிபிசூட்கள் அவர்களை முழுதும் மறைப்பதால், அவர்களின் பேட்சை பார்க்க முடிவதில்லை, பெயரைப் படிக்க முடிவதில்லை இப்போதெல்லாம். எப்போதும் சுவாசக் கவசம் அணிவதால் லிப்ஸ்டிக் போட மாட்டார்களோ!
கண் இமையில் ராமர் நீல வண்ணத்தை பூசிக்கொண்டு அலைந்த ஒருத்தி இருந்தால் நான் வந்த இண்டிகோவில் இன்று. (நவீன ‘ராமா’யி!?)
பிபி சூட் பல வகைகளில் உதவுகிறது. விமானத்தின் உள்ளே நிறைந்து, டி சர்ட் மறைக்காத முழங்கைப் பகுதிகளில் சுருக்கென்று குத்தி தூங்கவிடாமல் நடுங்க வைக்கும் குளிரை ‘நிக்கறியா கொஞ்சம்!’ என்று கூறித் தடுத்து நம்மை காக்கிறது.
நாடாவை இழுத்துக் கட்டாமல், ‘வல்க்ரோ’வை சேர்த்து ஒட்டாமல் திறந்த ‘கோட்’ ஆகவே விடும் போது, ரஜினியின் நினைவு வருகிறது. ரஜினி போல உணர்வு வருகிறது. படமெடுத்துக் கொள்ள ஆர்வம் வருகிறது.
எனக்கு வேறொன்றிற்கும் பயன்பட்டது பிபி சூட் இன்று.
தூத்துக்குடி ஜிஆர்ட்டியிலிருந்து ஆறரை மணிக்குக் கிளம்பும் போது, அவர்கள் கொடுத்த ‘பிரேக்பாஸ்ட் ஃப்ளைட் பேக்’கின் சாண்ட்விச்சை ஃப்ளைட்டில் உட்கார்ந்திருக்கையில் சாப்பிட்டு முடித்ததும் மடியில் சிதறிய துகள்களையும், கையையும் வாயையும் துடைக்க உதவியது!
வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
நடுவானில்
20.08.2021