அரசுப் பள்ளிகளிலிருந்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்தும் பல்வேறு காரணிகளைத் தகுதிகளாக வைத்துக் கணக்கிட்டு, அதிலிருந்து 65 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து ‘செம்மை சீர் ஆசிரியர் 2021’ என்ற பதக்கமும் சான்றிதழும் அளித்து அணி செய்யும் பணியை செய்யும் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ இயக்கத்தினரோடு கைகோர்க்கும் பேறினை பெற்றோம்.
ஆசியர்களுக்கு அளிக்க ‘செம்மை சீர் ஆசிரியர் 2021’ பதக்கத்தை ‘மு. பச்சைமுத்து அறக்கட்டளை’யிலிருந்தும், சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி புத்தாக்கம் செய்யும் மலர்ச்சி உரையை ‘மலர்ச்சி’யிலிருந்தும் என செய்ய இரட்டிப்பு வாய்ப்பை தந்தது வாழ்க்கை.
புவனகிரி, சிலம்பிமங்கலம், தம்பிக்கு நல்லான் பட்டினம், தச்சக்காடு, வல்லம், பூவாலை, பரங்கிப்பேட்டை, குமராட்சி, கத்தாழை, புதுக்குப்பம் என கடலூர் கல்வி மாவட்டவே அதிகமிருந்த போதிலும், வண்ணாரப்பேட்டை, விருத்தாசலம், திருவள்ளூர் என வேறு இடங்களிலிருந்தும் விண்ணப்பித்து வென்றிருந்தார்கள் பல பள்ளி ஆசிரியர்கள்.
சில மாதங்களுக்கு முன்பு நாம் ‘வளர்ச்சி’ இதழிலும் இணைய தளத்திலும் ‘இவரை தமிழக அரசு கவனிக்கவேண்டும்!’ என்று பாராட்டி எழுதியிருந்த ‘கல்வி ரேடியோ’ கத்தாழை கார்த்திக் ராஜாவும் விருது பெற்றார். ( நேற்று அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பட்டியலில் இவர் இருக்கிறார் என்பது முக்கிய செய்தி).
முருகையன், செங்குட்டுவன், அருணாச்சலம், டாக்டர். அறிவுச்செல்வம், வீனஸ் அன்பழகன், ராஜசேகர், சிதம்பரநாதன், ஜா. ராகவன், பேராசிரியர் ஞானகுமார், தினமணி சுந்தர்ராஜன், டாக்டர் நடனசபாபதி என சிதம்பரத்தின் பல பெரிய மனிதர்கள் தன்னலம் கருதாது பொது நன்மைக்காக இறங்கி உழைக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஆர்வமுடன் பங்கேற்க, சிதம்பரம் நகர டிஎஸ்பி 3 மணி நேரம் முழுதாய் ஒதுக்கி பங்குபெற என எல்லா வகையிலும் சிறப்பாக, சிதம்பரம் வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது நிகழ்ச்சி.
ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து, மலர்ச்சி உரையின் வழியே ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவது நிறைவு தரும் உன்னத செயல்தானே!
ஆசிரியர்களுக்கு செய்வதை ஆசிரியரான என் தந்தை வானிலிருந்து பார்த்து மகிழ்வார். அதிலும் சிலர் என் தந்தையோடு பணி புரிந்த ஆசிரியர்கள், சிலர் என் தந்தையின் மாணவர்கள் இன்று ஆசிரியர்களாக இருப்பவர்கள்!
‘நான் டீச்சர்தான். நீங்க என்னை அடிச்சி நிமித்திட்டீங்க. இப்போ இன்னும் உற்சாகமா போவேன் வகுப்பெடுக்க!’
‘பரமன், நீங்க தகப்பன் சாமி. தகப்பனான ஆசிரியர்களான எங்களுக்கு சரியான புரிதல் தந்த புள்ளை மாணவன் நீங்க! இனிமே வேற மாதிரி போவோம் பணிக்கு!’
மலர்ச்சி உரை முடிந்த போது அங்கேயே எழுந்து பகிர்ந்த ஆசிரியர்களின் உணர்வுப் பகிர்வுகளில் சில இவை.
நிறைவோடு பயணிக்கிறோம் சென்னை நோக்கி!
ஆசிரியர் தின வாழ்த்துகள்!
– பரமன் பச்சைமுத்து
#Apk
#ArasupPalli
#TeachersDay
#Chidambaram
#MuPachaimuthuArakkattalai
#Malarchi
#MalarchiChidambaram
#Chidambaram
Facebook.com/ParamanPage