வேகவதி ஆற்றை நீக்கிவிட்டு காஞ்சியின் சிறந்த மன்னனான மகேந்திர பல்லவனின் வரலாற்றை எழுதவே முடியாது.
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்த வந்த போது, அந்தப் பக்கம் சாளுக்கிய படை, இந்தப் பக்கம் கோட்டை மூடப்பட்ட காஞ்சி மாநகரம் என வரலாற்றின் இடையே வேகமெடுத்து ஓடுகிறது வேகவதி ஆறு.
சங்ககால பத்துப்பாட்டின் அரசன் ‘தொண்டைமான் இளந்திரையர்’ முதற்கொண்டு சோழ, பல்லவர்கள் என பல அரசர்களை கண்ட, யுவான் சுவாங் போன்ற பயணிகளை, ராமானுஜர் போன்ற பெரும் ஆச்சாரியர்களை என காலகாலமாய் பலரையும் கண்ட வேகவதி ஆறு சாக்கடைக் கழிவாக ஓடுவதை காண நேர்ந்தது இன்று. பேரறிஞர் அண்ணா கூட வேகவதியில் இறங்கி நீராடி மகிழ்ந்திருப்பார்தான். சாக்கடை கழிவாக ஓடுகிறது.
நல்ல நதிகளை ஆக்ரமித்து வீடுகட்டுகிறார்கள் என்பது ஒரு பிரச்சினை, நதிகளை கழிவுநீர் வடிகாலாக மாற்றுவது நாம் தொடங்கி வைக்கும் அடுத்த பெரும் பிரச்சினை. இதற்கேதேனும் தீர்வு வர வேண்டும். நிலமும் கெடுகிறது, நிலத்தடி நீரும் கெடுகிறது.
கழிவுநீரிலிருந்து காஞ்சியின் வேகவதி காப்பாற்றப்பட வேண்டும். நதி காப்பாற்றப்பட்டால் நீர் சிறக்கும், நிலத்தடி நீர் உயரும், நிலம் செழிக்கும், பல்லுயிர் பெருகும்.
வேகவதி வேகமாய் காப்பாற்றப் படட்டும்! பிரார்த்தனைகள்!
– பரமன் பச்சைமுத்து
காஞ்சிபுரம்
12.09.2021