பிஜேபியா திமுகவா என்பதற்குள் நுழையவில்லை, விரும்பவுமில்லை.
ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு குழந்தைகள் பள்ளி வருவதற்குக் கூட ஏற்பாடுகள் அறிவித்துள்ளது அரசு, சிறப்பான முன்னேற்பாடுகளோடு. திரையரங்குகள், வணிக வளாகங்கள் என எல்லாமும் செயல்பாட்டில்.
பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம். புரட்டாசி சனியில் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசிப்பது அவர்களுக்கு காலம்காலமான ஒரு விருப்பம், வேண்டுதல். தொற்று அதிகம் இருந்த காலத்தில் என்பது வேறு, இப்போது வணிக வளாகங்கள், திரையரங்குகள் இயங்கும் நிலை என்பது வேறு. புரட்டாசி சனி கோவில்களை சில ஏற்பாடுகளோடு திறந்திருக்கலாம்தான்.
(நேற்று விஆர் மாலில் பிவிஆர் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றனர். முன்பதிவு முடிந்தும் வேறு டிக்கெட் இருக்கிறதா என பார்க்க ‘டாக்டர்’ படத்திற்கு)
1 ஆம் வகுப்பு பிள்ளைகள் பெற்றோரோடு வகுப்பில் அமர வேண்டும், டாஸ்மாக்கில் சமூக இடைவெளியோடு நின்று வாங்க வேண்டும், திரையரங்கில் இவ்வளவு இடைவெளி வேண்டும், பேருந்தில் இப்படி, ரயிலில் அப்படி…என ஏற்பாடுகள் செய்யப்படும் போது கோவிலுக்கும் அதை செய்யலாம்தானே! தொற்று கட்டுக்குள் இருக்கிறதே! அதுவும் ஞாயிறு முழுநாளும் தடுப்பூசி முகாம் அமைத்து இது வரை 70.71லட்சம் செலுத்தியாச்சே.
‘இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்’ என்று ஏற்கனவே பேசப்படும் நிலையில், மற்ற எல்லாவற்றையும் தளர்த்தியவர்கள் புரட்டாசி சனியில் கோவிலுக்கு விடாததால் இன்னும் பேசுவார்கள்.
தவிர, ‘வார இறுதிகளிலும் கோவிலை திறக்க வேண்டும்!’ என்று பாஜக ஒரு அரசியல் செய்வதற்கு வாய்ப்பளித்திருக்க வேண்டாம்.
- மணக்குடி மண்டு
10.10.2021