சிறுவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் எழுதுவது எளிதில்லை என்பதை பல ஆண்டுகளாக ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதை பகுதியில் எழுதி வருவதால் அடிக்கோடிட்டு சொல்ல முடியும்.
(சிறுவர்களுக்காக நாம் செய்யும் அந்தப் பகுதியை பெரியவர்களே அதிகம் ரசிக்கின்றனர் என்பது வேறு கதை)
இயல்பாக வருவதை சிறுவர்களுக்கான எளிய நடையில் மாற்றிதான் நாம் எழுதுகிறோம் என்று நாமே நினைத்தாலும் இன்னும் மாற்றலாம் மாற்ற முடியும் என்பதே உண்மை.
பெரிய ஆளுமையை விமர்சிக்கிறேன் என்று மூக்கைச் சுறுக்கி என்னைப் பார்க்கலாம் சிலர் என்றாலும் கருத்தை வெளிப்படுத்தத்தானே வேண்டும் என்ற எண்ணத்தில் இதை வெளிப்படுத்துகிறேன்.
எஸ்ராவின் ‘பதின்’ இதையே உணர்த்துகிறது எனக்கு. ( இன்னும் முழுசாக படித்து முடிக்கவில்லை. தொடக்க நிலை உணர்வு இது)
இந்த திசையில் மருதன் அசத்துகிறார் (‘இந்து தமிழ் திசை’யில் தொடர்ந்து எழுதுபவர். கிழக்குப் பதிப்பகத்தில் எடிட்டராக இருந்த அவரும் இவரும் ஒன்றா என தெரியவில்லை).
அழ வள்ளியப்பா மீது பெரும் மதிப்பு வருகிறது. வல்ல நாடு ராமலிங்கம் யாரோ தெரியாது. ஒன்றாம் வகுப்பில் படித்த அவரது குழந்தைகளுக்கான யானைப் பாடலின் வரிகளை இன்று மீள் பார்வை செய்கையில் அவர் மீது மரியாதை பெருகுகிறது. கீழ்வரும் அவரது வரிகளைப் பாருங்களேன் உங்களுக்கே புரியும்.
//
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி தண்ணீரை கலக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம் !’
//
– பரமன் பச்சைமுத்து
சென்னை
15.03.2022