‘இதுதான் வாழ்க்கை!’ என்று ஏற்றுக் கொள்ளும் போது, இன்னல்களுக்குக் காரணமான உளைச்சல்கள் உதிர்ந்து விடுகின்றன, ‘இனி செய்ய வேண்டியது என்ன!’ என்பது பற்றி தெளிவும் வழிகளும் தோன்றி விடுகின்றன.
‘என்னைச் சுற்றி எல்லாமும் சரியாக இருந்தால்தான் என்னால் இயங்கமுடியும், எதையும் செய்ய முடியும்!’ என்பவர்களுக்கு எல்லா நேரங்களிலும் அப்படியான தருணங்களை வாழ்க்கை தந்துவிடுகிறதா என்பது கேள்விக்குறிதான்.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் போய்க்கொண்டேயிருக்கும் பூந்த மல்லி நெடுஞ்சாலையின் தாசப்பிரகாஷ் ஹோட்டல் – ஆண்டர்சன் லேப் சந்திப்பில் எத்தனை டெசிபெல் என கணக்கிட இயலா வாகன இரைச்சல் சந்தடிகளுக்கிடையே, வாகனங்கள் ஊர்ந்து போகும் பாதைக்கு சில அடிகள் அருகில் படுத்து கண்மூடி உறங்க முடிகிறது இந்த நாயால்.
‘எவ்வளவு சத்தங்களை பார்த்திருக்கும் தன் வாழ்நாளில்!’ என்று கடக்கலாம், ‘சத்தம்தான், இரைச்சல்தான்! என் வாழ்க்கை இதுக்கு இடையில்தான்!’ என்று இயல்பாக ஏற்றதால் எதிர்ப்புகள் உதிர்ந்ததால் உறக்கம் வருகிறது என்றும் சொல்லலாம்.
‘இதுதான் வாழ்க்கை!’ என்று ஏற்றுக் கொள்ளும் போது, இன்னல்களுக்குக் காரணமான உளைச்சல்கள் உதிர்ந்து விடுகின்றன, ‘இனி செய்ய வேண்டியது என்ன!’ என்பது பற்றி தெளிவும் வழிகளும் தோன்றி விடுகின்றன.
‘எவ்வளவு இரைச்சலுக்கிடையிலும் அமைதி கொள்ளும் இருப்பு!’ என்பது குங்ஃபு பாண்டா திரைப்படமும் பௌத்தமும் சொல்லும் உச்சபட்ச நிலை. நல்லுறக்கம் கொள்ளட்டும் இந்நாய். அமைதி கிடைக்கட்டும் நாய்க்கும், நமக்கும், எல்லோர்க்கும்!
வாழ்க! வளர்க!
– பரமன் பச்சைமுத்து
ஆண்டர்சன் லேப்,
சென்னை
11.05.2022
#Peace
#InnerPeace
#DogSleeps