கிராமத்தையொட்டிய தங்களது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும் 76 வயது கோதையானுக்கும் அவரது மனைவி 72 வயது ராணியம்மாளுக்கும் எவர் சொல்லிக் கொடுத்தார்கள்!!
40 ஆண்டுகளாக வெறும் மழை நீரை மட்டுமே பிடித்து காய்ச்சி பருகி, சமைத்து வருகின்றனர். ‘எவ்வளவு நாளானாலும் புழுவோ பூச்சியோ பிடிக்காது மழை நீரில். 40 ஆண்டுகளாக மழைநீர்தான் எங்களுக்கு. அதனால்தான் மருத்துவமனைக்கே போனதில்லை!’ என்கின்றனர் திருவண்ணாமலை மாவட்டத்து வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்த இந்த தம்பதிகள்.
தங்கள் நிலத்திற்கு கிணற்று நீர், நிலத்தடி நீர் பம்பு செட் பாசனம் செய்யும் இவர்கள், தங்களுக்கென பருகுவது மழைநீர் மட்டுமே.
சென்ற மாதம் நான் நேர்காணல் செய்த ‘ஜென் ரெயின் மேன்’ சொன்ன நீரியியல் நுட்பங்களை, ‘கையா’ முதற்கொண்டு புவிக்கோளத்தின் நீரியியல் இயற்கை அறிவியலின் நுட்பங்களை ஆராய்ந்து சொல்லும் நவீன அறிவியலாளர்களின் கருத்துகளை, அப்போதே இவர்களுக்குச் சொன்னது எவரோ!
காரைக்குடியின் நூற்றாண்டு கால செட்டிநாட்டு வீடுகளின் முற்றங்களில் கூரையிலிருந்து வழிந்து விழும் மழைநீரை துணி வழியே வடிகட்டி பெரும் கொப்பறைகளில் நிரப்பி சேமிக்கிறார்கள் என்பதை என் சமீபத்திய ஆத்தங்குடி பயணத்தில் கண்டேன். ஆத்தங்குடி சிவன் கோவிலுக்கு எதிரிலிருக்கும் அட்டகாசமான சுத்தமான ஊருக்கான ஊருணியும் மழைநீர் சேகரிப்பே. வீட்டில் வழியும் மழையை கொப்பரையிலும், வெளியே ஓடுவதை ஊருணியிலும் சேமித்திருக்கிறார்கள்.
வந்தவாசி அடுத்த கிராமத்தின் இந்த வயதான தம்பதிகள் நாம் தவற விடும் எதையோ உணர்த்துகிறார்கள். ” ‘வான் சிறப்பு’ என்றோர் அதிகாரமே அப்போதே எழுதிவிட்டேன் போடா!” என்று வள்ளுவர் சிரிப்பது போலுள்ளது.
- பரமன் பச்சைமுத்து
27.08.2022 - பரமன் பச்சைமுத்து
27.08.2022