பள்ளியில் பயின்ற காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் இரவு சீக்கிரம் உறங்கச் செல்வதை வழக்கமாகக் கொண்ட என் மகள்கள், முதுகலை படித்த போது கொரோனா தீ நுண்மி பொதுமுடக்கக் காலங்களில் இயல்பு மாறி நள்ளிரவு வரை கண்விழிப்பு காலையில் நேரங்கழித்து எழல் என இரண்டு மூன்று மாதங்கள் இருந்தார்கள். காலை உடற்பயிற்சியை விடவில்லையென்றாலும் இரவில் உறங்குவது தள்ளிப்போனது.
இரண்டொரு முறை கோடிட்டு காட்டி விட்டுவிட்டேன்.
முதுகலை முடித்து வேலைக்கே போய் விட்டனர். ஊரிலிருந்து மகள் வந்திருக்கிறாள் இன்று. முழுநிலவு நாள் என்பது முடிந்த வரை எனக்கு முழுதாய் நிலவொளி வாங்கும் நாள். மொட்டை மாடியில் என்னோடு நிலவொளியில் நனைந்து திரிந்தவள், பத்தரைக்கெல்லாம் படுக்கைக்குப் போய் விட்டாள். என் வேலைகளை முடித்து விட்டு பத்தரைக்கு அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன் தூங்கியே விட்டாள்.
நிறுவனப் பொறுப்பு, விட்டதை
மறுபடியும் சீராக்கி விட்டது. தனக்கான ஒரு வேலை என்று வரும் போது பொறுப்பு வந்துவிடுகிறது. தான் செய்ய வேண்டியது, தினமும் கொள்ள வேண்டியது என்று பொறுப்புகள் வந்துவிடும் போது வாழ்வு இன்னும் ஒழுங்கு பட்டுவிடுகிறது.
தினசரி உருவாக்கிய ஒரு சீரான பழக்கம், நாளை விடுமுறைதான் என்றாலும் இன்றும் அதை தொடர வைத்துவிடுகிறது.
Loving you.
வாழ்க! வளர்க!
- பரமன் பச்சைமுத்து
10.09.2022