
2,500 ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னர்களால் நிறுவபட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மறைந்ததாக சொல்லப்படும் பூம்புகார் பற்றிய அகழ்வாராய்ச்சி ஆய்வு திட்ட குழுவின் புதிய தகவல் விழிகளை விரிய வைத்து வாயைப் பிளக்க வைக்கிறது.
பூம்புகார் நகரத்தின் வயது 15,000 ஆண்டுகள்!!!!
15,000 ஆண்டுகள் பழமையான நகரம், 70 – 80 கப்பல்களை நிறுத்துமளவிற்கு துறைமுகம், சரக்குகளை ஏற்ற உருவாக்கப் பட்ட மணல் மேடுகள், துறைமுகத்துக்கு வடக்கே 4 சதுர கிமீ பரப்பில் குடியிருப்புகள், 12 கிமீ நீளத்திற்கு சுற்றுச் சுவர்களுடன் கூடிய கட்டிடங்கள், 15,000 ஆண்டுகள் பழமையான ஒரு கலங்கரை விள்ளக்கம், காவிரியும் கிளை நதிகளும் உருவாக்கிய ஆழமான பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, 3 பூம்புகார் நகரங்கள் என பலதையும் கண்டறிந்திருக்கிறது பூம்புகார் ஆய்வுத் திட்ட தேசிய ஒருங்கிணைப்பு குழு.
‘சிந்துசமவெளி நாகரீகத்திற்கும் முற்பட்டது, பூம்புகார் உலகிலேயே முதலாவதானது!’ என்கிறார் சோம.ராமசாமி.
மயிலாடுதுறை வரை கடல் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளனவாம். (‘தச்சக்காடு – வல்லம் – அருண்மொழி தேவன் வரையில் கடல் வந்து சென்றுள்ளது. அதனால்தான் மணக்குடி வடக்குவெளி வயலாமூர் வயல்களில் மண்ணின் தன்மை பல ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இருந்தது!’ என்று நான் சொல்லிக்கொண்டே இருக்கும் யூகத்தையும் எவரேனும் இப்படி நிரூபிக்கட்டும் விரைவில். ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ நூலில் குறிப்பிட்டிருப்போம்)
பூம்புகார் பற்றிய ஆழ்கடல் நகரங்கள், துறைமுகம், பள்ளத்தாக்கு பற்றிய செய்தி பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. வரலாற்று ஆய்வாளர்கள் திரும்புவார்கள். புனைவு எழுத்தாளர்கள் புதுக் கதைகள் புனைவார்கள். உலகெங்குமிருந்து மெதுவே ஆய்வாளர்கள் வருவார்கள்! வரட்டும்! வரட்டும்!
இன்னும் பல தகவல்கள் ஆதாரத்தோடு வெளி வரட்டும்!
மகிழ்ச்சி!
மயிலாடுதுறை வரை கடல்… நினைக்கவே வித்தியாசமாக இருக்கிறது.
– பரமன் பச்சைமுத்து
21.01.2022