நுழைவு அனுமதி பெற குடியேற்றம் எனப்படும் இமிக்ரேஷன் துறையில் நுழையும் போது பலருக்கும் பலவித அனுபவங்கள் உண்டு நாடுகளைப் பொறுத்து.
கமல்ஹாசன் போன்ற நடிகரையே நான்கு மணி நேரம் கனடாவில் உட்கார வைத்தது உண்டு. அமெரிக்காவின் கதவு வரை போய்விட்டு அனுமதி கிடைக்காமல் ‘நோ’ என்று முத்திரை குத்தப்பட்டு விமானத்தில் திருப்பியனுப்பப் பட்டவர்களும் உண்டு. மருத்துவத்திற்காக சென்னை வந்திறங்கிய வேலுபிள்ளை பிரபாகரனின் அம்மாவை அப்படியே வேறு விமானத்தில் ஏற்றியனுப்பிய நிகழ்வை நாம் பார்த்தோம்தானே!
துபாய் நோக்கிப் பயணிக்கும் எனக்கு சென்னை பன்னாட்டு விமான்நிலையத்தில் இன்று கிடைத்தது வித்தியாச அனுபவம். இமிக்ரேஷனில் நுழைந்தால் ‘என்ன வேலையா அந்த நாட்டுக்கு போறீங்க?’ ‘வாட்ஸ் த பர்பஸ் ஆஃப் யுவர் விசிட்?’ ‘என்ன வேலை செய்யறீங்க?’ என்று கேட்பார்கள்.
பாஸ்போர்டையும் விசாவையும் தந்துவிட்டு நிற்கிறேன்.
‘கும்முன்னு முடி வச்சிகிட்டு ரஜினிகாந்த் மாதிரி இருக்கீங்க சார்!’
‘என்னவோ முடி இருக்கு சார்!’
‘கவர்மெண்ட் ரெக்கார்டுல இருக்கற உங்க ஃபோட்டோலயும் கும்முன்னுதான் இருக்கு! மகிழ்ச்சியா இருக்கீங்க, அதான்!’
‘இஇஇ..ஈஈஈஈ!’
‘பச்சக்!’
கூண்டின் உள்ளே தடுப்புக்கு அந்தப்பக்கம் அமர்ந்து இமிக்ரேஷன் அனுமதி முத்திரை குத்தி, பாஸ்போர்டைத் தந்தவரை முழுதும் கவனிக்கிறேன்.
தலையில் முடி இல்லை!
- பரமன் பச்சைமுத்து
சென்னை விமான நிலையம்
17.02.2023