வேர்களைத் தேடி…

பிரித்தானியர்கள் பாரதத்திலிருந்து வெளியேறிய போது இங்கிருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு போயினர் அவர்களது பல நாடுகளுக்கு. தோட்டத் தொழிலாளர்களாகவும் பிற வேலைகளுக்கும் போன தமிழர்கள் அங்கேயே குடியேறி விட அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழகத் தொடர்பு இல்லாமல் தமிழ் பேசிக்கொண்டும் தமிழ் பேசத் தெரியாமலும் அங்கேயே புலம்பெயர்ந்த அயலகத்தமிழர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் இன்றைய தலைமுறைகளை தமிழகத்துக்குக் கொண்டு வந்து கலாச்சார சுற்றுலாவும் கல்வியும் தமிழ் ஊக்கமும் தந்து தமிழ்த் தூதுவர்களாக அனுப்பினால் எப்படியிருக்கும்! ‘வேர்களைத் தேடி…’ எனும் நிகழ்வாக இதை நிகழ்த்துகிறது தமிழக அரசின் அயலகத் தமிழர்கள் ஆணையரகம். அட்டகாசமான வாய்ப்பு இந்த 100 பேருக்கும். அரசின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஃபிஜித் தீவுகள், தென்னாப்பிரிக்கா, உகாண்டா, கனடா, வவுனியா, கொழும்பு, இந்தோனேசியா, ஜெர்மனி, மொரீஷியஸ், மலேசியா, ஃபிரான்ஸ், ஆஸ்த்திரேலியா, மியான்மார், மார்ட்டினிக், குடலோப் என 14 நாடுகளிலிருந்து தமிழகம் வந்து கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுக்க பயணித்து பல அனுபவங்கள் பெற்ற 100 அயலகத் தமிழர்களுக்கு பெரியார் திடலில் ‘மலர்ச்சி உரை’ ஆற்றும் வாய்ப்பை நல்கியது வாழ்க்கை இன்று.

(எனக்கு முன்பாக தமிழ் வெர்ச்சுவல் யுனிவர்சிட்டியின் தலைவர், தமிழ்நாடு் திறன் மேம்பாட்டு ஆணையரகத்தின் இயக்குநர் ஆகியோரும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும் பேசினர்.

மதிய உணவுக்குப் பிறகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு இந்த அயலகத் தமிழர்களின் 2 வார நிகழ்வுகளை முடித்து வைக்கிறார் என்று தகவல் கேட்டேன். )

தமிழ் ஓரளவுக்குப் பேசுகிறவர்கள், நன்றாக பேசுகிறவர்கள், தமிழே தெரியாதவர்கள், தமிழை வேறு மொழி்போல் பேசிகிறவர்கள் என கலந்திருந்த அயலகத் தமிழர்களிடையே மலர்ச்சி உரை ஆற்றும் படி இருந்தது வித்தியாசமான அனுபவம்.

வவுனியாவிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும், கொழும்பிலிருந்தும் வந்திருந்த பெண்களுக்கு ‘இவ்வளவு சக்தியோடு இத்தனை வலிமையாக ஒருவரால் பேசமுடியுமா!’ என்ற மலைப்பாம். அவர்கள் இலங்கையில் தன்னம்பிக்கை வகுப்பெடுக்கும் தமிழ்ப்பெண்களாம்.

ஃபிஜித்தீவிலிருந்தும் மியான்மரிலிருந்தும் வந்த பெண்கள் கொஞ்சும் தமிழில் பேசினர். உகாண்டாவிலிருந்து வந்த பெண் அட்டகாசமான தமிழில் பேசினார்.

‘வாட் எவர் யு ஸ்போக் இன் இங்க்லிஷ், ஐ குட் அண்டர்ஸ்டேண்ட். ஐ லேண்ட் தீஸ் திங் ஃப்ரம் யு. யு ஆர் வெரி பவர.ஃபுல். ஐ டிட்ன்ட் அண்டர்ஸ்டேண்ட் ஃபுல் தமில். பட், ஐ வாஸ் அட்ராக்டேட் டுவேர்ட்ஸ் யு!’ என்றார் ஃபிஜியிலிருந்து வந்த பெண்.

நல்லனுபவம் இரு பக்கமும். இங்கிருந்து பயணித்தவர்களின் தலைமுறையினர் இதோ நம்மோடு இங்கே நிற்கிறார்கள் என்ற உணர்வோடு நின்றோம்.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’

– பரமன் பச்சைமுத்து
சென்னை
15.08.2024

#TnGovt #ReachingTheRoots #Verkalaithedi #அயலகத்தமிழர் #Ayalagathamizhar #Malarchi #பரமன்பச்சைமுத்து #ParamanPachaimuthu #tamilmotivational #ParamanLifeCoach #பரமன் #lifecoach #StayWithPositive #தமிழ் #TamilForeign #மலர்ச்சி #Malarchi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *