பல்லிகள் உண்டு, ஆனால் அந்த ஊரில் அவை கத்தாது! (‘ம்யூட்’ செய்யப்பட்டுவிட்டன போல பல நூற்றாண்டுகளாக)
ஒரே நேரத்தில் சராசரியாக 250 பிணங்கள் கிடக்கும் அந்த நதியின் கரையில், ஆனால் அந்த ஊரில் மட்டும் பிணங்கள் நாறாது!
அத்தனை பிணங்கள் தரையில் கரையில் கிடக்கும், ஆனால் அவ்வூரில் கருடன் பறக்காது!
காக்கைகள் அந்த ஊரில் கத்துவதேயில்லை!
அப்படி ஓர் ஊரா?
……
ஒரு பெரு நதியைத் தேடி பெரும் விருப்பம் கொண்டு பயணிக்கிறேன். தேடலைத் தொடர்கிறேன். நெடுநாளாய் கண்டு திளைக்க விரும்பிய அந்த பெரு நதியைப் பற்றி அப்புறம் பார்ப்போம். அதற்கு முன் சில சங்கதிகள்.
…….
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!’ என்று பாரதி முழக்கம் செய்ததற்கு காரணம் இந்த ஊரின் மண்ணில் அவன் உலவி பல மொழிகளை கேட்டும் கற்றும் பேசியும் அறிந்ததால்தான்.
எகிப்தும் ரோம்மும் வருவதற்கு முன்பே அந்த நகரம் இருந்திருக்கிறது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். மக்கள் வாழ்ந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணுக்குள் புதையுண்டு அதன் மீது வேறொரு தலைமுறை நகரம் உருவாகி, பின்னே அதுவும் புதையுண்டு என இந்த ஊர் மண்ணுக்குள் 6 அடுக்குகளாக இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
திருநாவுக்கரசரும் சுந்தரரும் தங்களது தெய்வத் தமிழ் தேவாரப் பதிகங்களில் ‘இறைவன் உறையும் தலங்கள்’ என ஒரு பட்டியலை இட்டு அதில் இந்த ஊரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.
‘பரமன்! இந்த ஊர் இந்த ஊர் என்கிறீர்களே! எந்த ஊர் அது?’ என்கிறீர்களா? பொறுங்கள், பொறுங்கள். வருகிறேன்.
உங்களுக்குத் திருமணமாகி விட்டதா? ஊராரும் உற்றாரும் உறவினரும் வந்து கூடி, மஞ்சளரசி அட்சதை தூவி வாழ்த்திட தயாராக காத்திருக்கும் வேளையில் மணமேடைக்கு வந்து மணமகளை ஏற்று மஞ்சள் தாலி கட்ட வேண்டிய மாப்பிள்ளை முறுக்கிக் கொண்டு கிளம்பி ஒரு நாடகம் நடத்துவாரே! உங்கள் திருமணத்தில் நடந்ததா? ஒரு சோடி புது செருப்பும், குடையும் தந்து மரியாதையெல்லாம் செய்து மாமனார் / அம்மான் அவரை மனம் மாற்றி அழைத்து வருவார் நினைவிருக்கிறதா?
அந்த நாடகத்தில் மாப்பிள்ளை எந்த ஊருக்கு, எந்த யாத்திரைக்கு செல்வார் ?
….
ஒரு பெரு நதியைத் தேடி பெரும் விருப்பம் கொண்டு பயணிக்கிறேன். தேடலைத் தொடர்கிறேன்.
(தொடர்வோம்)
*:பெரு நதியைத் தேடி – 1*
– பரமன் பச்சைமுத்து
(தற்போது கொல்கத்தாவில்)
23.08.2024
#Kolkatta #Varanasi #ParamanTouring #ParamanVaranasi #Kashi #Kasi #காசி #வாரணாசி #ParamanPachaimuthu #PeruNathiyaiThedi #பெருநதியைத்தேடி