ஆடிப்பெறுக்கு வெல்லமிட்ட அரிசி

20240803_145709

காவிரி, கொள்ளிடம், வீராணத்தால் வாழ்வு பெறும் மக்களின் ஒரு முறைமை கொண்டாட்டமாக இருக்கும்.

பூமுடித்த பெண்கள் வெல்லம் இடப்பட்ட ஊற வைத்த அரிசி, வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி சகிதமாக தாம்பாளத்திலோ முடைந்து மெழுகப்பட்ட முறத்திலோ மங்கலப் பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக ஆற்றுக்கும் வாய்க்காலுக்கும் ஆற்றின் வழியே நீர் பெற்று வாழ வைக்கும் ஏரிக்கும் குளத்திற்கும் குட்டைக்கும் குட்டிப் பிள்ளைகள் பின் தொடர செல்வர்.

ஆற்றின் வாய்க்காலின் கரையில் மாக்கோலமிட்டு அந்த இடத்தையும் மனதளவில் தங்களையும் பூசனைக்கு தயார் செய்வர். ‘நாங்கள் செழிக்கிறோம்! நன்றி!’ என்று நன்றி செலுத்தும் விதமாக ஆரத்தி எடுத்து நீரை வணங்குவர். சிலர் கற்பூரத்தை ஏற்றி வெற்றிலையில் வைத்து நீரில் விட்டு வணங்குவர். சிறுவர்கள் நாங்கள் வியப்பும் வேடிக்கையுமாய் கண்டுகளித்து குதூகலிப்போம். வெல்லம் போட்ட அந்த ஊறிய அரிசி்யை தரும்வரை காத்திருக்க முடியாமல் தவிப்போம், குதிப்போம். ‘டேய்! இருங்கடா தருவாங்க!’ என்ற பெரியவர்களின் அதட்டலை சட்டையே செய்யாமல் சத்தமிடுவோம். ஒரு பிடி அரிசி தந்ததும் வாயிலிட்டு மகிழ்வோம்.

பெண்கள் பலர் தங்களது தாலியை பிரித்துக் கோர்க்கும் நாளாக ‘ஆடிப் பெறுக்கு’ நாளை கருதுவர். திருமணமான இளம் தம்பதிகள் பாதுகாத்து வைத்திருக்கும் தங்களது திருமண மாலையை இந்நாளில்தான் சோடியாக இறங்கி நீரில் விடுவர். (நான் என் திருமண மாலையை கொள்ளிடத்தில் இறங்கி விட்டேன் அப்போது, ஊருக்கு அருகில் இருக்கும் வெள்ளாற்றில் அப்போது தண்ணீர் இல்லாததால்)

இந்த படையலை சில பெண்கள் ஆற்றில் செய்வர். சிலர் ஏரி, வாய்க்கால், குளம், குட்டை, கண்ணி என்று தங்கள் வீட்டருகில் இருக்கும் நீரில் படைப்பு செய்வர்.

தனது ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் வந்தியத் தேவன் அறிமுகக் காட்சியை வீராணம் ஏரிக் கரையின் ஆடிப் பெறுக்கு கொண்டாட்டத்தோடேயே விவரித்திருப்பார் கல்கி. ஆடிப்பெறுக்கு சிதம்பரம், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை பகுதிகளில் ஒரு கொண்டாட்டம், ஒரு வழக்கம்.

இன்று ஆடிப் பெறுக்கு!

சிறு வயதிலிருந்தே ஆடிப் பெறுக்குக்கு நீர் நிலைகளை வணங்கிய வழக்கம் கொண்ட விவசாய குடியில் வந்த என்னைப் போன்றோர் நகரத்தில் ஆடிப்பெறுக்கு நாளன்று மானம்பாத்தான் வாய்க்காலையும் வெள்ளாற்றையும் கொள்ளிடத்தையும் நினைத்துக் கொள்கிறோம். கனகாம்பரமும் துலுக்க சாமந்தியும் முடித்து வெற்றிலையை வாய்க்காலில் விட்ட அன்றைய அக்காக்களை நினைத்துக் கொள்கிறோம்.

‘ஆடிப்பெறுக்கு’ நாளன்று நீர் ஆதாரங்களை வணங்கும் வழக்கத்தில் வளர்ந்து புவனகிரி நகரத்திற்குப் புலம் பெயர்ந்த மனிதரொருவர், தன்னுள்ளே வளர்ந்த வழக்கத்தைத் தொடர இதை செய்திருக்கிறார் (பார்க்க படம்)

ஆடிப்பெறுக்கு வாழ்த்துகள்!

– பரமன் பச்சைமுத்து
03.08.2024

#AdiPerukku #Adi18 #ஆடி #ஆடிபெறுக்கு #Cauvery #Kollidam #Chidambaram #Manakkudi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *