வீட்டில் ஒரேயடியாய் குதூகலம், டூட்டியில் ஒரேயடியாய் விறைப்பு என்று இருக்கும் முறுக்கு மீசை போலீஸ்காரர் ஒருவரின் வாழ்க்கையில் ஆள்-அம்பு-சேனை என்று வாழும் எதற்கும் பயப்படாத தாதா ஒருவர் குறுக்கிட்டுவிட்டால் என்னவாகும், அவர்களிடையே நடக்கும் மோதல்கள் என்ற ‘மூன்று முகம்’ காலத்தைய, எல்லா ஹரி படத்திலும் பார்த்த கதைதான். ஆனால் கொடுத்த விதத்தில் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர்.
இந்தக் கதையை சூர்யாவிற்கு சொல்லியிருந்தால் சந்தோஷமாக சிங்கம் வரிசயில் சேர்த்து எடுத்திருப்பார்! போலீஸ் பெருமை சொல்லும் படம்.
‘பீட்சா’விற்கு அப்புறம் விஜய் சேதுபதியும், ரம்யா நம்பீசனும் சேர்ந்திருக்கிறார்கள். பொருத்தம் பிரமாதம். ரம்யா கவனம் ஈர்க்கிறார்.
மொத்த படமும் விஜய் சேதுபதியை சுற்றியே வருகிறது. மிக அருமையாக தன்னை கொடுத்திருக்கிறார்.
பக்கத்து ஸ்டேஷன் போலீசிடம் சந்திப்பு, ‘என் ஸ்டேஷன்ல எப்படி உள்ள வந்தே’ என்று உதார் விட்டு, அதற்கப்புறம் நடக்கும் நிகழ்வு, அப்போது வரும் டீ, ‘நான் இருக்கும் போதே இப்படீன்னா, நான் இல்லாத போது? பெட்டிய எடுத்திட்டு கெளம்பு’ என்னும் அம்மாவுக்கு ரம்யா நம்பீசன் பதில் சொல்லும் அந்த இடம், பழைய TAA நம்பர் ப்ளேட் கொண்ட புல்லட்டில் வில்லனின் இடத்திற்கு வந்து அவன் பரக்க பரக்க இருக்க, ஒண்ணும் செய்யாமல் போவது மாதிரியான தூரங்களை அங்காங்கே கட்டி திரைக்கதையை தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். திரைக்கதைதான் படத்தின் இரண்டாம் நாயகன்.
மதுரையில் நடக்கும் கதை, ஆனால் ‘வாத்தியார்’ பாத்திரம் வரும் வரை மதுரை மொழியே இல்லை. படம் முழுக்க அவர்கள் கூட்டம் மட்டுமே மதுரை மொழி பேசும், பையன் கையில் துப்பாக்கி கொடுத்து பயமுறுத்தும் காட்சி போன்றவை குறைபாடுகள்.
ஒரு பாடலை வில்லனுக்கும், நாயகனுக்கும் வைத்த உத்தி நன்று.
சிறந்த பொழுதுபோக்குப் படம்.
வி டாக்கீஸ்: வெர்டிக்ட்: ‘சேதுபதி’ – ஆக்ஷன்பதி – பார்க்கலாம்.
திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து