பூவை சூடிய பூவை

ப்ளுமேரியா பூவை தலையில் சூடிய ஒரு பெண்ணை புதுச்சேரியில் உணவருந்தப் போன இடத்தில் பார்த்தேன்.

நெடு்நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன், பூவையை அல்ல, பூவை சூடிய பூவை!

எதிரில் அமர்ந்து சாப்பிடும் பரியை படமெடுப்பது போல பாவனை காட்டிவிட்டு தூரத்தில் குடும்பத்தோடு அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை குவியம் செய்து(திருட்டுத்தனமாய்!) படமெடுத்துக் கொண்டேன்.

இலங்கையிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும் அல்லது கனடாவிலிருந்து வந்திருக்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக இருந்திருக்க வேண்டும்.

செங்காந்தள், நீலக் குறிஞ்சி, நில சம்பங்கி், ஐரிஸ், மேப்பிள், செர்ரி ப்ளாஸம், துலிப், டாஃபோடில், என ஒவ்வொரு நிலத்திற்கும் நாட்டிற்கும் அதற்கேயுரிய பூக்கள் உள்ளனவே. ஊரை, நாட்டை விடுங்கள் குடிகளுக்கே தனித்தனி அடையாளப் பூ உண்டென்கிறது புறநானூறு. சோழர்கள் பனைப்பூ(பனம்பூ, பனை மடலால் பனம்பூ சேர்த்து கோர்த்த மாலை), சேரர்கள் ஆத்திப்பூ, பாண்டியர்கள் வேப்பம்பூ சூடினர் என்கின்றது பழந்தமிழ் இலக்கியம்.

தாழம்பூ சூடி மணக்குடி பொன்னியம்மன் கோவில் உற்சவத்துக்கு வந்த சந்திரா அக்கா நினைவில் வந்து போகிறார். ‘தாழையாம் பூ முடித்து’ பாடல் எப்போது ஒலித்தாலும், பொன்னியின் செல்வன் புதினத்தில் ‘தாழம்பூ சூடியிருந்த பூங்குழலி’ என்ற வரிகளைப் படிக்கிற போதும், சந்திராக்காவின் நினைவு வந்து போகும் எனக்கு. அதன் பிறகு அவரைப் பார்க்கவேயில்லை, திருமணமாகி ஏதோ ஊருக்குப் போய் விட்டார். மரிக்கொழுந்தின் ஓர் இணுக்கை தலையில் முடிந்தபடி கொமட்டிக்கொல்லையிலிருந்து கூடையில் அரும்பும் கீரைக்கட்டுகளையும் கொண்டு வந்து மணக்குடி தெருக்களில் கூவி விற்கும் ‘கொமட்டிகொல்லையாங்க’ அக்கா நினைவிற்கு வருகிறார்.

உமா அக்கா பட்டு ரோசாவும், துலுக்க சாமந்தியும் வளர்த்தார். செடியிலிருந்து வெடித்து கனகாம்பரம் விதை வெளியே விழுவதையெல்லாம் எனக்கு விளக்கியது உமாக்காதான். கையில் முள் குத்தாமல் நீர்முள்ளி செடியின் நீலப்பூவை பறிக்கக் கற்றுத் தந்ததும் உமாக்காதான்.

அடுத்தவர் பார்வை பற்றிய பிரஞ்ஞை எதுவுமின்றி மணக்குடி பாப்பாக்குளத்தில் பறித்த அல்லியை தலையில் சூடி, அடுத்தவர்களை திடுக்கிட வைத்த சிறுவயது கலைச்செல்வி யை இப்போது நினைத்தாலும் புன்னகை அரும்புகிறது. தாமரையை பெயரிலேயே சூடிய தாமரைச்செல்வர்களும் செல்விகளும் மணாளன்களும் தமிழகத்தில் உண்டு. பெரும் விருது வென்ற ‘தாமரை திரு’க்களும் உண்டு.

கனகாம்பரம், வாடாமல்லி, துலுக்க சாமந்திப்பூக்களை தலையில் சூடியதெல்லாம் உமாக்கா, உடன் படித்த சரஸ்வதி, விஜயா, சாந்தி, மகேஸ்வரி, புவனாவோடு போனது. போன தலைமுறையின் பெண்கள் மட்டும்தான் இன்னமும் பூச்சூடுகிறார்கள். ‘செவ்வந்திப் பூ முடித்த சின்னக்கா’களும், ‘தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா’க்களும் போன தலைமுறையோடு போய் விட்டார்கள். இளம் தலைமுறை பூச்சூடச் சொன்னால் தெறித்து ஓடுகிறது. ”எத்தினிக்’ உடை அணியும் போது மட்டுமே பூ!’ என்றாகிப் போனது நவீன கலாச்சாரத்தில்.

இங்கே ஒரு இளம்பெண் ப்ளுமேரியாவை சூடியிருப்பது ஒரு வகை அபூர்வமாக தோன்றியது. மெட்ராஸ் சென்னையாக மாறி, மவுண்ட் ரோடு அண்ணா சாலையாக மாறி, ‘ஃபோர் லேன்’ முறைக்கு மாறிய போது, ஆயிரம் விளக்கு மசூதி் அருகில் சாலையின் நடுவிலும் கிரீம்ஸ் ரோடு முனையிலும் வாகனப் புகைச் சூட்டிலும் பூத்து நின்றன இந்த ப்ளுமேரியா பூக்கள்.

பங்களாதேஷ், பாலி தீவு, இலங்கை போன்ற இடங்களின் பெண்கள் இம்மலரை சூடுவர்.

இலங்கையில் இந்தப் பூவை ‘அரேலியா பூ’ என்றும் ‘கோவில் பூ’ என்றும் விளிப்பராம். உலகின் மற்ற இடங்களில் ‘ப்ளுமேரியா’ (Plumeria), ‘ஃப்ராங்கிபானி’ என்றெல்லாம் ராங்கித்தனமாக அழைப்பதாகவும் அறிகிறேன்.

சிறு வயதில் தன் ஊரில் தன் நிலத்தில் பார்த்து மகிழ்ந்த ஒரு பூவை, பல ஆண்டுகளுக்குப் பிறகு வேற்று தேசத்தில் பார்க்கும் போது, தனது நிலத்தின் நினைவுகளும் உணர்ச்சிகளும் சட்டென்று நெஞ்சில் வந்து விடும்தானே! அந்த இளம் பெண் சூடிக் கொள்வது வெறும் பூவையல்ல, நினைவுகளை உணர்ச்சிகளை!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
20.06.2024

#Araliya #Frangipani #Plumeria #SrilankanTamil #CanadaTamil #ParamanTouring #பரமன் #பரமன்பச்சைமுத்து #அரேலியா #ப்ளுமேரியா #பூ #flowers #Paraman #ParamanPachaimuthu #PoriKadalai #Puducherry

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *