……
குத்தாலிங்கம்: பரமன், ஆக்னஸிடமிருந்து கேள்வி வந்திருக்கிறது. பதில் வேண்டும்.
Agnes Batch 47: I have got one (Kaba Sura Kudi neer). Please guide how to make the medicinal drink.
…..
பரமன்:
கப சுர குடிநீர் என்பது சித்த மருத்துவத்தில் தரப்படும் முக்கிய மருந்து (கஷாயம்).
நில வேம்பு குடிநீர் காய்ச்சலுக்கு என்பதைப் போலவே இதுவும் காய்ச்சலுக்கு என்றாலும் இது கபம் (சளி), தொண்டை வலி, இருமல், காய்ச்சல் ( சுரம் ) போன்ற பலவற்றிற்கும் அருமருந்து என்கிறார்கள் சித்த மருத்துவர்கள் ( டாக்டர் நாகராஜன், மருத்துவர் சிவராமன், டாக்டர் ராஜலட்சுமி ). இந்தியாவே ( உலகமே ) பன்றிக்காய்ச்சலில் தவித்த போது அரசு மருத்துவமனைகளில் இந்தக் கப சுர குடிநீரைத் தந்து பன்றிக் காய்ச்சலைத் தெறிக்க விட்டது நினைவிருக்கலாம்.
வெறும் வயிற்றில் பத்து நாள் உட்கொண்டால் வந்த பன்றிக் காய்ச்சல் பறக்கும், ஐந்து முறை உட்கொண்டால் பன்றிக்காய்ச்சல் மட்டுமல்ல எந்தப் பன்றியும் வராது என்கின்றனர்.
இந்தக் கபசுரக் குடிநீரையும் நில வேம்புக் குடிநீரைப் பற்றியுமே நான் குறிப்பிட்டிருந்தேன் இருதினங்களுக்கு முந்தைய ‘வளர்ச்சிப் பாதை – நேரலை’ நிகழ்ச்சியில்.
சுக்கு, திப்பிலி, இலவங்கம்,
சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகார வேர், முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதொடை இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு
சிறு தேக்கு, நிலவேம்பு, சமூலம், வட்ட திருப்பி வேர்
கோரை கிழங்கு ஆகியவை முறையாகக் கலந்து செய்யப்பட்டதே கப சுரக் குடிநீர் கலவை என்று குறிப்புகள் சொல்கின்றன.
10கி இந்தக் கலவையை 200மிலி தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, 50மிலி ஆகும் வரை காய்ச்சி எடுத்து வடிகட்டி எடுத்தால் கப சுர குடிநீர் தயார், இதை காலை மாலை ஆகாரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும் என்கிறது சித்த மருத்துவ குறிப்பு.
(ஒரு ஸ்பூன் மருந்தை, 2 கிளாஸ் தண்ணீரில் விட்டு நல்லா கொதிக்க விட்டு, முக்கால் கிளாஸ் ஆற வரை சுண்ட காய்ச்சி வடிகட்டி கசக்க கசக்க வெறும் வயித்தில குடிம்மா! நீ நல்லா சோக்காருப்பே! )
வாழ்க! வளர்க!
பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
23.03.2020