சிவ ஆகமம் படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த, செல்லுமிடமெல்லாம் திருமுறைகளை பாடிய, தன்னால் முடிந்தவரை அடுத்தவருக்குக் கடத்திய என் தந்தையின் முதலாம் ஆண்டு நாள் (குருபூசை என்போம்) வருகிறது சில தினங்களில்.
சிவபூசனை செய்வோர், இறைவனை வழிபட விரும்புவோர் பஞ்ச புராணங்களை திருமுறை பதிகங்களை பாடி வழி பட விரும்பினால், அவர்களுக்கு உதவ சில பக்கங்கள் கொண்ட ஒரு நூல் இருந்தால் உதவியாயிருக்குமே!
எத்தனையோ வேதியர்கள் குடமுழுக்கிலும் வேள்விகளிலும் தமிழ்த்திருமுறைகளையும் பாட உரக்க வாசிக்க விரும்புவரே, இதோ முக்கிய பாடல்கள் என எடுத்து எளிமையாய் சொல்லி ஒரு சிறு நூல் இருந்தால்…!
அப்பா தன் உடலில் இருந்தவரை இதைச் செய்தார், அப்பா ஆய்வுகள் செய்து தேர்ந்தெடுத்துத் தந்த அந்த சில திருமுறை பாடல்களை கொடுத்து சிறு நூலாக்கி உலகிற்குக் கொடுத்தால்…
*’சிவ வழிபாட்டு மாலை’* உருவாக்கத்தில் இறங்குகிறோம். *மு. பச்சைமுத்து அறக்கட்டளை* வழியே வேண்டுவோருக்கு இது தரப்படும் (கட்டணம் இல்லை).
சிவபுரத்திலிருந்து என் தந்தை ஆசிபுரியட்டும், தில்லைச் சிற்றம்பலத்திலிருந்து பெருமான் அருள் புரியட்டும்.
பக்தியுடன்,
பரமன் பச்சைமுத்து
மு. பச்சைமுத்து அறக்கட்டளை
07.12.2020