இரவெல்லாம் பயணித்து அதிகாலை விடியும் முன் அந்த வீட்டின் முன் வந்து நிற்கிறேன். இழவு வீடென்றும் சொல்ல முடியாது, நேற்று மாலை போஸ்ர்ட் மார்ட்டத் செய்து பொட்டலமாய் வந்த பிரேதத்தை எடுத்துப் போய் அடக்கம் செய்துவிட்டனர். நான் இப்போதுதான் வருகிறேன். எங்கும் போகாமல் நேராய் இங்கு வந்து நிற்கிறேன்.
உள்ளே கதவை தாழிட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர். உடலை அடக்கம் செய்துவிட்டு இழப்பை ஏற்க முடியாமல் பல்வேறு சிந்தனைகளால் உறங்க முடியாமல் தவித்து மெதுவே இப்போதுதான் உறங்கியிருக்கக் கூடும். எழுப்ப மனமில்லை. நான்கு மணி. விடியட்டுமென வாசலிலேயே நிற்கிறேன்.
நேற்று வரை இதே வீட்டின் கதவின் அந்தப் பக்கத்தில் ராமலிங்கம் சித்தப்பாவும் உறங்கியிருந்தார்.இன்று வெறும் காலமாக நினைவாக மாறிப் போனார்.
‘டேய் சிவா… வாடா! வீடு பூட்டியிருக்கா!’ என்று என்னிடமும், ‘கஸ்தூரி, சிவா வந்திருக்கான் எழுந்து யாராவது கதவத் தொறங்க!’ என்று அவர்களிடமும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
யாருமில்லாத இந்த இருட்டில் தனியே நிற்கும் என் பக்கத்தில் கூட அவர் நிற்கலாம். உயிர் ரகசியத்தை, மரணத்திற்குப் பின்னே என்ன என்ற பெருரகசியத்தை, இன்னும் என்னவெல்லாமே சொல்ல முயற்சிக்கலாம்.
அந்த அலைவரிசையை பார்த்து கேட்டு உணரும் சக்தி நம் கண்களுக்கு காதுகளுக்கில்லையே!
பரமன் பச்சைமுத்து
பெருமாத்தூர்
26.09.2016