மழை வந்தால் பனி இருக்காது என்பது மற்ற ஊர்களுக்கு எப்படியோ, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு அது பொருந்தாது போல. நகரில் இறங்கும்போது ‘நேத்து முச்சூடும் பேஞ்சுதுங்க!’ என்று யாரோ சொன்னதை நம்பமுடியவில்லை. ‘சூரியன் வரட்டும், அப்புறம் போறேன் நான்!’ என்பதுபோல இறங்கி அப்படியே நகரின் மேலேயே நிற்கிறது பனி, ‘இப்போதைக்கு நான் வர்றதா இல்லையே!’ என்பதாக முகம் காட்ட மறுக்கிறது சூரியன். ‘கார்த்திகைக்கே இப்படின்னா, மார்கழிக்கு எப்படி இருக்கும்…கூக் கூக்..’ என்கிறது பொள்ளாச்சியின் ஒரு குருவி.