வேறொருவனுக்கு மணமாகிப் போய்விட்ட தனது முன்னாள் காதலியின் குழந்தை கடத்தப் படுகிறது. கடத்தப் பட்டக் குழந்தையைத் தேடிச் செல்லும் அந்நாள் காதலன், கடத்தப்பட்ட இடம், பள்ளி, காவல் துறை, குடியிருக்கும் இடம் என்று எங்கு தேடியும் அப்படியொரு குழந்தையேயில்லை என்று அறிந்து அதிர்ந்து நிக்கிறான். அப்புறம் என்ன நடக்கிறது? ஏன் அப்படிச் சொன்னாள் அவள்? – என்று விறுவிறுவென்று திரையில் விரியும் திரில்லர் படம் – ‘சத்யா’.
நல்ல திரைக்கதை கொண்ட படத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டதன் மூலம் சிபிராஜ்க்கு பெயர் சொல்லும் ஒரு படம் இது. அம்மா பெயரில் அப்பாவே தயாரிக்க மகன் நடித்துக் கொடுத்துள்ளார்.
தன்னைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருகிறது என்பதை உணர்ந்து, கொடுத்த பாத்திரத்தை மிக அழகாக செய்து விட்டார் ரம்யா நபீசன்.
வேகமாக முழுங்கி முழுங்கி சரத்குமாரைப் போலவே பேசும் வரலக்ஷ்மி ஸ்டைலாக அருமையாக செய்திருக்கிறார். முதல் பாதியில் யோகி பாபுவும், இரண்டாம் பாதியில் ஆனந்தராஜும் (போகிற போக்கில்!) நகைச்சுவையைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
எந்த டாக்டர் இப்படி சொல்வார்கள் பரிசோதனைக்குப் போன ஒரு ஆணிடம்? அதுவும் இவ்வளவு கொடூரமாக? ‘எதற்காக நாயகனை சிட்னியில் இருந்து அழைத்தார் நாயகி?’ என்ற புதிரை அவிழ்க்கும் போது அவளது பாத்திரத்தின் தன்மையையே குலைத்துப் போட்டு விடும் அந்தக் கடைசிக் காட்சிகள் போன்ற பலவீனங்கள் இருக்கின்றன என்றாலும், பரபரவென்று போகும் திரில்லர் திரைக்கதை எல்லாவற்றையும் மறைத்து விடுகிறது.
‘யவ்வனா’ நல்ல வார்த்தை, பாடல் நன்று,
வீ டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘சத்யா’ – பாக்கலாம்யா!
– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து