உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் உங்கள் திருமணத்தில் இந்தப் பாடல் இசைக்கப் பட்டிருக்கலாம். இன்னும் ஆகவில்லையா? உங்கள் திருமணத்தில் இது பாடலாகவோ நாதஸ்வரத்திலோ இசைக்கப்படும்.
அறுபத்தியேழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்தேறும் பெரும்பான்மையான திருமண வைபவங்களில் மண அரங்கிற்கு மணப்பெண்ணை அழைத்து வரும் வேளையில் இதுதான் ஒலிக்கிறது. இன்று வரை மாற்றவே முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது ‘வாராயென் தோழி வாராயோ’
1961ல் இந்தப் பாடலை எழுதிய போது கவியரசு கண்ணதாசனுக்கும், பாடிய போது எல் ஆர் ஈஸ்வரிக்கும், ஆர்மோனியத்தை இயக்கி இசையமைத்த போது எம்எஸ்விக்கும்… அறுபதாண்டுகளுக்கும் மேலாக மாற்றே இல்லாத ஓரிடத்தை அந்தப் பாடல் பிடித்துக் கொள்ளப் போகிறது என்று தெரிந்திருக்காது.
‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ ‘சிங்கார வேலனே தேவா’ ‘நலந்தானா?’ போல சில பாடல்கள் நாதஸ்வரம் வழியே வரும்போது அட்டகாசமாக இருக்கும். நாதஸ்வரம் வழியே அவை வழியும் போது அவற்றின் மூலப் பாடல் மீது இன்னும் பிடிப்பும் ரசிப்பும் வரும். ‘சூர்யாணோ சாந்தீராணோ சாட்டென ஸொல்லூ… ஏ பல்லேலக்கா பல்லேலக்கா’ என்று நமது பாடலை அமெரிக்க மாணவர்கள் பாடியதை யூ ட்யூப்பில் கண்டு சிரித்து வியந்து ரசித்த பின்னே அசல் பாடலின் மீதொரு பெரும் மரியாதை வருகிறதே அப்படி.
#Pandiyan_Marriage
பரமன் பச்சைமுத்து
மணக்குடி
22.04.2018
Facebook.com/ParamanPage