‘ஒரு சிங்கம் பார்த்துப் பார்த்து திட்டம் போட்டு வேட்டையாடுச்சாம். எங்கிருந்தோ திடீர்னு வந்த கழுதைப்புலி மான் கறிய தின்னுட்டுப் போயிடுச்சாம். அந்த சிங்கத்துக்கு எப்படி இருக்கும்? கோவத்துல, அவமானத்துல பழி வாங்க அது துடிச்சதாம்!’ என்று கதாபாத்திரத்தின் குரல் வழியாகவே மொத்தத்தையும் சொல்லிவிட்டு அதை ஒரு நல்ல த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர். நல்லவராகத் தெரிபவர் உண்மையில் கெட்டது செய்தவர், கெட்டது செய்கிறவறாகத் தெரிபவர் உண்மையில் நல்லவராக இருந்தவர் என கரணம் தப்பினால் மரணம் எனும் கோட்டில் திரைக்கதையை கட்டி வெற்றி பெற்று விட்டார் இயக்குநர்.
நயன்தாராவிற்கு திரும்பவும், மொத்த படத்தையும் தோளில் தூக்கி சுமந்து பயணிக்கும் சூப்பர் ஸ்டார் பாத்திரம். முதல் காட்சியில் தொடங்கி, ‘இது நாள் வரைக்கும் யாருன்னு தெரியல. இப்ப தெரிஞ்சிடுச்சி!’ என்று சொல்லி இறங்கும் கடைசி காட்சி வரை அஞ்சலியாக நன்றாகவே செய்திருக்கிறார்.
விஜய் சேதுபதி வந்து, வந்த வேகத்தில் ‘இமைக்கா நொடிகளை’த் தந்து விட்டு போய் விடுகிறார். அதர்வாவுக்கும் துடிப்பான பாத்திரம். கொடுத்ததை நன்றாகச் செய்திருக்கிறார்.
அனுராக் காஷ்யப் மிக அருமையான தேர்வு.
அதர்வா – ராஷி கன்னா – மாடலிங் நண்பர் காட்சிகள் நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளன என்றாலும் தடதடவென பயணிக்கும் படத்தின் வேகத்தை இழுத்து குறைத்து விடுகின்றன. குறிப்பாய் பாடல்கள். ஒரு குறும்படமாக அல்லது நீளம் குறைவாக உள்ள படமாகத் தந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
‘இமைக்கா நொடிகள்’ : நல்ல த்ரில்லர் : பார்க்கலாம்.
– திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து