நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் சுட்டெரிக்கும் நெருப்புக் குழாய்க்குள் நுழைந்து வெளியே வரும்படியான சோதனை ஒன்றை நடத்தி மனிதர்களையும் சிறப்பு சக்தி பெற்றவர்களையும்(வேதாளம்!) பிரித்துப் பார்ப்பதாக ஒரு காட்சி வரும். வேங்கிக்கால் – தண்டராம்பட்டு – சோமாசிப்பாடி – திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அப்படியொரு சக்தி பெற்ற வேதாளங்களைப் போலவே தெரிகிறார்கள்.
கொளுத்தும் 41 டிகிரி வெய்யிலில், முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு தலையிலும் எதையும் அணியாமல் சாலையோரங்களில் நின்று சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சிரபுஞ்சியில் இருப்பவனுக்கு மழை பொருட்டல்ல என்பதைப் போல, வெய்யில் சுடுவதில்லை இவர்களுக்கு. அதே சூழலில் இருந்து இருந்து, உடல் சூழலுக்கு ஏதுவாக மாறிவிடும் அதிசயத்தைப் பெற்று விடுகிறது.
‘நெருப்புடா….’ என்று கொளுத்தும் உச்சி வெய்யிலில் ‘என்னா இப்போ அதுக்கு!’ என்பது போல முதுகில் பையை மாட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் திரிபவர்களைக் காணும் போது, ‘நல்ல வேளை வானவெளியில் பைக் ஓட்ட முடியாது. இல்லன்னா, பையை முதுகில மாட்டிகிட்டு பைக்க எடுத்துகிட்டு பூமியிலேருந்து நேரா சூரியன் கிட்டயே போய் நிறுத்திட்டு கதை பேசிட்டு இருப்பாங்க போல இவங்க!’ என்று எண்ணத் தோன்றுகிறது.
– பரமன் பச்சைமுத்து
திருவண்ணாமலை
26.04.2019