வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் கடவுளின் சக்தி வாய்ந்த ரிமோட்டை சிங்காரச் சென்னையில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், என்னாவாகும்? ‘அறை எண் 305ல் கடவுள்’ இருப்பார்.
வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் வேற்றுகிரகவாசி ஒருவனின் சக்தி வாய்ந்த ரிமோட்டை ராஜஸ்தான் பாலைவனத்தில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், அவன் தலைநகர் தில்லிக்குப் போனால், என்னவாகும்? அவனது தேடலும், அவனது விகல்பமில்லா வெகுளிக் கேள்விகளும், அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும், குடிகாரனது பேச்சாய்த் தோன்றும், ‘PK’ என்று ஆகும்.
ஒற்றை லைன் ஒரே மாதிரி சாதாரணமாக தோன்றினாலும், கொடுத்த விதத்தில் உயர்ந்து நிக்கிறான் ‘பீக்கே’.
தன் இருப்பின் ஆதாரத்தைத் தொலைத்துத் தவிக்கும் ஒருவனை, அவனது தேடல் என்ன என்றே தெரியாமல், ஆன்மீகம் என்ற பெயரில் பேச்சு சாமார்த்தியம் கொண்டவர்கள் ஏமாற்றுவதை, நம்பி இருக்கும் மக்கள் மீது தங்களது வழிமுறைகளை திணிப்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உரித்துக் காட்டும் திரைக்கதை.
‘பீக்கே’ சில இடங்களில் சிரிக்க வைக்கிறான், சில இடங்களில் சிந்திக்க வைக்கிறான், சில இடங்களில் மனதை தொடுகிறான்.
ஆராம்பக் காட்சிகளில் அமீர்கான் ஓடும்போது, ‘அட.. ‘பிதா மகன்’ சித்தன்’ என்ற எண்ணம் இயல்பாய் வருகிறது. கண்ணிமைக்கா வேற்று கிரகவாசியாய், என்ன எதிர்வேண்டுமோ அதை விட அதிகமாய் தந்து நிற்கிறார் அமீர்கான்.
தமிழில் வந்தால், கமல் செய்ய வேண்டும். அவர் கிடைக்காவிட்டால் விக்ரம் செய்ய வேண்டும்.
வெர்டிக்ட்: ‘பீக்கே’ – பாருங்கள்.
திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து
ParamanIn.com