‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

dunkirk1 - Copy

 

 

 dunkirk2

அண்டப் பெருவெளியின் அடையமுடியா கருந்துளைக்குள் மாட்டிக்கொண்டு புகுந்து வெளியேறும் அதிபுத்திசாலி நாயக நாயகியர்களைப் பற்றியும், உறங்கச் செய்து கனவுக்குள் மூழ்கி அதன் வழியே அடுத்தவனின் கனவுக்குள் புகுந்து உள்ளே ஆழ்மனதை சரி செய்துவிட்டு தனது கனவுக்குத் திரும்பி வட்டத்தை முடித்து மெதுவாக உறக்கத்திலிருந்து வெளியேறி விழித்து உட்காரும் புத்திசாலி நாயக நாயகி பற்றியும், இரவுகளில் வீறு கொண்டு எழுந்து வீர தீர பராக்கிரமங்களைச் செய்யும் ‘பேட் மென்’ பற்றியும் படமெடுத்து ஆலிவுட்டை அதிரவைக்கும் பெரும் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் இம்முறை போர்முனையில் உயிர் காக்க ஓடி வெளியேறப் போராடும் சாமானியர்கள் பற்றி எடுத்திருக்கும் படம் ‘டங்கிர்க்’

டங்கிர்க் துறைமுகத்தையொட்டிய சாலையில் கடற்கரையை நோக்கி தனது சகாக்களுடன் நடந்து செல்லும் பிரித்தானிய போர் வீரன் ஒருவன் இயற்கை உபாதையை தாங்க முடியாமல் ஒதுங்க எத்தனிக்கையில் வெடித்துச் சீறி வரும் ஜெர்மானிய தோட்டாக்களுக்குத் தப்பிப் பிழைக்கத் தொடங்கிய தலை தெறி ஓட்டம், நிலத்தில் நீரில் படகுகளில் கப்பல்களில் என தொடர்ந்து மூச்சு முட்ட போராடி கடைசியாக இங்கிலாந்தின் மண்ணில் வந்து சேரும் வரை தொடர்கிறது,

கடந்த வினாடி வரை உடன் பயணித்த வீரர்கள் யாரும் உயிரோடில்லாமல் தான் மட்டும் தப்பி வந்துள்ளோம் என்பதைக் கூட நினைத்துப் பார்க்க நேரமில்லா ஓட்டம் கொண்ட அவனது போராட்டமும், டங்கிர்க் துறைமுகத்தை விட்டு வெளியேறி தனது மண்ணிற்குத் திரும்பத் துடிக்கும் அவனது பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் நிகழ்வுகளை மிக அருமையாக உயிரோட்டமாக பதிவு செய்திருக்கிறார்.

நிலம், நீர், வான்வெளி என்று ஒரே நேரத்தில் மூன்று நிலைகளிலும் நடந்ததை பதிவு செய்திருக்கிறார்கள்.   

dunkirk

 

நடக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் படகின் விளிம்பில் விறைத்து சித்தப் பிரம்மை பிடித்து கிட்டத்தட்ட செத்து கொண்டிருக்கும் மனிதனொருவனை தனது படகிலேற்றி காப்பாற்றும் முதியவர் தாம்சன் – பீட்டர் – ஜார்ஜ் வரும் அந்தக் காட்சிகள் கவிதை என்றால் கரை ஒதுங்கி தரை தட்டி நிற்கும் படகில் உயிர்காக்க உள்புகுந்து கடல் ஓதம் எழும்பக் காத்திருக்கையில் பாய்ந்து வரும் ஜெர்மானியக் குண்டுகளிடையே உயிர் தப்ப முயலும்போது இதுவரை ஒரு வார்த்தையும் பேசாத ஜிப்சன் பிரித்தானியன் அல்ல என்று தெரிய வரும் இடம் ‘ஐயோ’.  

இத்தனை உயிர்களை எதிரிகளின் ஷெல்லடிப்புகளிலிருந்து போராடி காத்த வான்வெளி வீரன் எரிபொருளில்லாமல் நிலத்தின் மறுமுனையில் இறக்கி எதிர்களிடம் சிக்கும் நிகழ்வு கொடுமை.

உயிர் காக்க ஓடி நீந்தி பயணித்து ஒரு வழியாக ரயிலை பிடித்து களைப்பில் உறங்கி கண் விழிக்கையில் ஏதோ ஒரு நிருத்தத்தில் சன்னலுக்கு வெளியே கல்லடித்து விளையாடிக் கொண்டிருக்கும் இரு சிறுவர்களைக் கண்ட போது ‘ஊரு வந்து சேர்ந்துட்டோம்! வீட்டுக்கு வந்துட்டோம்டா சாமீ!’ என்பதாக நாயகன் முனகுவான். வாழ்வின் சுதந்திரமும், உயிரின் மதிப்பும் அங்கே சுரீரென்று உறைக்கிறது நமக்கும்.

வீ – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘டங்கிர்க்’ – ஒரு அருமையான நாவலைப் படித்த திருப்தி. எத்தனைப் பேருக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை.

: திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

 

   

 

2 Comments

  1. R mohanraj

    I watched the movie yesterday. This movie is not “the” best of nolan. But it is “one of the best” of him. But the dialogue sequence in the climax “we hadn’t do anything just survived” “that’s enough” shows the pain of them. And he deserves an Oscar this time.

    Reply
    1. paramanp (Post author)

      Yeah… Beautiful film

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *