கல்கியைப் படிக்கையில் சோழர்கள் மீது ஏற்படும் பெரும் அபிமானம், அரு. ராமநாதனைப் படிக்கையில், பாண்டியர்களே சாதி மதம் தாண்டிய தமிழ்ப் பார்வை கொண்டிருந்தனர் – சோழர்கள் வடவர்களின் சாதீயத்தை கொண்டு புகுத்தியவர்கள் என்று தகர்ந்து போகிறது. சேர சோழ பாண்டியர்கள் பற்றிய பெருமையெல்லாம் பொடியாகி போகிறது சு வெங்கடேசனின் பறம்பின் வேள்பாரி பற்றிய ஆராய்ச்சிப் புனைவைப் படிக்கையில்.
பேரரசன் ராஜராஜனைப் பற்றிய பல கதைகளை உடைத்துப் போட்டு விட்டார் குடவாயில் பாலசுப்பிரமணியன் இப்போது. கருவூர்த் தேவர் ராஜராஜனின் குருவே இல்லை, அவர்கள் சமகாலத்தவர்களே இல்லை, ராஜராஜனின் குருவாக விளங்கியவர்கள் ஈசான சிவ பண்டிதர், சர்வ சிவ பண்டிதர், லகுலீச பண்டிதர் ஆகியோரே என்று கல்வெட்டுகளையும் ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு சொல்லும் அவரது சொற்கள் பாலகுமாரனின் பல பாகங்கள் கொண்ட ‘உடையார்’ நாவலின் மீது விழும் பெரிய அடி. ‘பிச்சையெடுத்து வாழும் சிவயோகியாகவே வாழ்ந்திருக்கிறார் கருவூர்த்தேவர். பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசு காலத்தில் கருவூர்த்தேவரை சித்தராக்கி விட்டார்கள். அது புராணமே தவிர வரலால்ல’ என்று அடித்திருக்கிறார் இந்த ஆராய்ச்சியாளர். (28.01.2018 – தினமணி – நேர்காணல்)
(முன்பு ‘இந்து தமிழ்’ நடத்திய தமிழ் விழாவில் கமல்ஹாசனோடு தான் கொண்ட கலந்துரையாடலில் புதுக்கோட்டை மாவட்ட ஏரியொன்றில் இருந்த ராஜராஜனின் கல்வெட்டைப் பற்றியும், அவ்வேரியில் இருந்த தொழில்நுட்பம் பற்றியும் அவர் சொன்னது அரங்கத்திலிருந்தோருக்குப் புல்லரிக்கச் செய்தது அன்று.)
‘புதினங்களில் – சுவராசியத்திற்காக கதாபாத்திரங்கள் படைக்கப் படுகின்றன. இருப்பினும், கல்கி அவர்கள் வரலாற்றுப் பயணம் செய்து ஓரளவு வரலாறு சிதையாமல் எழுதியிருக்கிறார்’ என்று குடவாயில் பாலசுப்ரமணியம் சொல்லியிருக்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.
இவையெல்லாம் படிக்கும் போது நீலகண்ட சாஸ்த்ரி மீது பெரும் மரியாதை வருகிறது.
www.ParamanIn.com