
கனவு என்பது நம் விருப்பம்தானே. எதையும் எப்படியும் காணலாமே! கவிப்பேரரசு வைரமுத்துவின் எதிரில் அமர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்டு விடை வாங்க வேண்டுமென்பது என் பலநாள் கனவு.
காலை விடியலிலேயே கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றது வாய்ப்பு, ‘ஒரு கேள்வி கேட்கலாம் பரமன் நீஙக்கள்!’ என்ற குறிப்போடு. விடவா முடியும்!
நேரலையில் வெப்பினாரில் கலந்து கொண்டு வைரமுத்து அவர்களோடு ‘எம் மக்களுக்கான ஒரு கேள்வி, எனக்கான ஒரு கேள்வி, கூடவே ஒரு கொசுறு கேள்வி!’ என்று இணையவெளியில் எதிரெதிரே முகம் பார்த்தமர்ந்து கேள்விகள் கொண்டு ‘சில நிமிட நேர்காணல்’ செய்ய முடிந்தது. அது மகிழ்வைக் கூட்டியது.
என் வணக்கத்திற்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, என் கேள்விகளை நான் கேட்டதும், ‘இரண்டு கேள்விகள் என்று சொல்லிவிட்டு மூன்று கேள்விகள் கேட்ட உங்கள் சாமர்த்தியம் பிடித்திருக்கிறது எனக்கு!’ என்று சொல்லி சிரித்து விட்டு தனது பதில்களைச் சொன்னார் திரு. வைரமுத்து.

ஒரு கேள்விக்கு, ‘இதை வெளியில் இப்போது சொல்ல வேண்டாம் என்று ரகசியமாக வைத்திருந்தேன். இப்படி பொதுவெளியில் கேட்டுவிட்டீர்களே.. உங்களுக்காகச் சொல்கிறேன்!’ என்று நெகிழ வைத்து பிறகு பதில் சொன்னார்.
சரியான கேள்விகளைக் கேட்டேன் என்பதில் கூடுதல் மகிழ்வெனக்கு. அதற்கான அவரது பதில்கள் நன்று.
நல்லனுபவம்!
நண்பர் வெங்கடேஷுக்கு நன்றி!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
16.05.2020