பல ஆண்டுகளாக மலை போல் கொட்டப்பட்டு குப்பைக் கிடங்காக பாழ்பட்டுக் கிடந்த 1.30 ஏக்கர் பகுதியை வளமீட்பு பூங்காவாக மாற்றி மண்புழு உரம், இயற்கை உரம் தயாரித்து விற்று விவசாயிகளுக்கும் உதவி செய்து வருவாயையும் பெருக்கி கலக்கியிருக்கிறார்கள் கல்லக்குடி பேரூராட்சியினர்.
மீன் கழிவுகளிலிருந்து மீன் அமிலம், முட்டை ஓடுகளிலிருந்து கல்ரோஸ் உரம் தயாரித்து விற்பது, இயற்கை உரங்களை பயன்படுத்தி தென்னை, மா, நாவல் மரங்கள், காய்கறித் தோட்டங்கள் அமைத்து புது உற்பத்தி என வருவாயைப் பெருக்கியிருக்கிறார்கள்.
மக்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரிப்பதால் குப்பைக்கான இடமும் குறைந்து விட, 1.30 ஏக்கரின் மீதியிடங்களில் கருந்துளசி, நொச்சி, ஆடாதொடை, முடக்கத்தான் வளர்க்கிறார்களாம். மீதி இடங்களை பசுமைத் தோட்டம் அமைத்து பொதுமக்கள் நடைப் பயிற்சி செய்யும் இடமாக மாற்றியுள்ளனராம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள கல்லக்குடி பேரூராட்சி் சிறந்த முன்மாதிரியாக நிற்கிறது. சிறந்த பேரூராட்சி என்று விருது அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
கல்லக்குடி பேரூராட்சி தலைவர் சாகுல் ஹமீதுக்கும் அவரது குழுவினருக்கும்… மலர்ச்சி வணக்கம்!
வாழ்க! வளர்க!
– பரமன் பச்சைமுத்து
12.08.2021