‘ஐ! கருப்பு வெள்ளை சிட்டுக்குருவி!’
‘பரமன், ப்ளாக் அண்ட் வொயிட்ல சிட்டு பார்த்தில்லை நான்! தேங்க்ஸ் ஃபார் த பிக்சர்!’
நமது முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தார்கள் விஜயனும், அக்ஷயாவும். இந்தக் கருப்பு வெள்ளைக்குருவிக்கு ஆங்கிலத்தில் ‘மேக்பை ராபின்’ என்று பெயர்.
தமிழில் இதை பெருமளவில் ‘வண்ணாத்திக் குருவி’ என்றழைப்பர். பெயரைக் கவனியுங்கள் – ‘வண்ணாத்திக் குருவி’. தன் இசையால் காற்றின் வெளியின் மாசுகளை துவைத்துப் போட்டு காய வைத்து விடும் போல. இதை ‘குண்டு கரிச்சான்’ என்றும் விளிப்பர்.
வண்ணாத்திக் குருவி அட்டகாசமாகப் பாடும். ஆண் பறவை தொடர்ந்து சில நாட்கள் பாடி பாடி தன் இருப்பை தேடலை அறிவித்து, தன் குரல் மூலம் தனக்கான இணையை ஈர்க்குமாம். (‘செல்ஃப் மேட்ரிமோனியல் சர்வீஸ்’! நோ பாரத் மேட்ரிமோனியல், ஷாதி டாட் காம்!)
‘சூப்பரா பாடுவேன், பாரு! என் குரல் என்ன என் சிறகென்ன, என் மரமென்ன என் நிறமென்ன!’ ‘வந்து எங்கூட சேரு, நாள் முழுக்க தருவேன் ஒனக்கு சோறு’ என்றெல்லாம் பறவை மொழியில் பாடும் போல. என்ன ஒரு மார்க்கெட்டிங்!!
‘பாட்டெடுத்து நான் படிச்சா, பாட்டருவி கண்ணுறங்கும்…’ என்று ‘சின்னத் தம்பி’ போல பாடுமாம்.
அப்புறமென்ன. அதன் குரலில் ஈர்க்கப்பட்டு அதற்கான பெண் பறவை பறந்து வந்து பக்கத்தில் வந்து அமர்ந்து, ‘ஒங்ம் மனசில பாட்டுத்தான் இருக்குது! என் மனசத கேட்டுத்தான் தவிக்குது! அதில் என்ன வச்சி பாட மாட்டியா? என் நெஞ்சுக்குள்ளே வாழும் ராசய்யா… மனசு முழுக்க இசைதான் உனக்கு, அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு…!’ என்று ‘பாண்டி நாட்டுத் தங்கம்’ படத்து கார்த்திக் – நிரோஷா கணக்கில் பாடி தம் சம்மதத்தை சொல்ல. ‘ஆங்… பாட்டாவே படிச்சிட்டியா… அப்ப நானும்…..’ என்று மானே, தேனே, பொன்மானே போடும் ஆண்பறவை. அப்புறமென்ன இரண்டும் சேர்ந்து ‘போவோமா ஊர்கோலம்… பூலோகம் எங்கெங்கும்!’தான்.
நான் கண்ட வரையில், வாசித்த வரை, கேட்ட வரையில் ஆண் வண்ணாத்திக்குருவிகளே பாடுகின்றன. பெண் குருவிகள் பாடுவது இல்லை. குயிலினத்திலும் இதே கதைதான். பெண் குயிலின் குரல் இனிமை என்று காலகாலமாய் ஏமாற்றி வந்த கவிஞர்களுக்கும் திரைப்பட பாடலாசிரியர்களுக்கும் ஒரு குட்டு வைப்போம். (பாரதிராஜாவுக்கு இது தெரிந்திருந்தால் ஒரு வேளை ‘முதல்மரியாதை’ படத்தில் ராதா பாத்திரத்திற்கு ‘குயிலு’ என்று பெயர் வைத்திருக்க மாட்டாரோ!’ இதைப் படிக்கும் ஊடக மக்கள் அடுத்த இண்டர்வியூல அவரைக் கேளுங்கப்பா)
வண்ணாத்திக் குருவிகள் ஒரு குறிப்பிட்ட காலங்களிலேயே தென்படுகின்றன என்கிறார்கள். தெரிந்தவர்கள் சொல்லவும்.
‘அப்பா, சின்ன வயசில மசினகுடியில பாத்தோமே, அதே குருவி பாரு!’ என்று மெல்லிய குரலில் என் மூத்த மகள் காட்டிய திசையில்,
சோடியாக இரண்டு வண்ணாத்திக்குருவிகள் அமர்ந்திருப்பதை கண்டு மகிழ்ந்து சத்தமின்றி படமெடுக்கவே முயன்றேன். ‘ஐயோ! ஒருத்தன் என்னை பாக்கறான்! ஐயோ!’ என்ற கணக்கில் சடுமென வேறு மரத்துக்கு பறந்து இலைகளுக்குள் ஒளிந்து கொண்டது பெண் வண்ணாத்திக் குருவி.
‘காதல் செய்யும் நேரத்தில் கரடியாய் வந்து தொந்தரவு செய்யும் மனிதா! படம்தானே, எடுத்துக்கோ எடுத்துக்கோ, எடுத்திட்டு நகரடா சீக்கிரம்!’ என்பது போல அமர்ந்திருந்த ஆண் வண்ணாத்திக் குருவி சின்னத் தம்பியைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள் நீங்கள்.
– பரமன் பச்சைமுத்து
விராஜ்பேட், கூர்க்
28.05.2024
#magpieRobin #BirdWatching #Westernghat #ParamanTouring #Paraman ##ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #Karnataka #KudaguMalai #Kodagu #ClubMahindra #Virajpet #ParamanTravelWriteup #ParamanCoorg #வண்ணாத்திக்குருவி #கரிச்சான்