கங்கையை கண்டு தீர அனுபவிப்பது என் தீராக் கனவாக இருந்தது. இறைவனின் தலையில் விழுந்து ஓடி வருகிறது, எல்லா இடங்களிலும் கிழக்கு நோக்கி ஓடி வருவது வாரணாசியில் மட்டும் வடக்கு நோக்கி ஓடுகிறது, மாமல்லபுரத்து பகீரதன் தவம் சிற்பம் சொல்லும் கதை, கங்கையின் நீர் பற்றி சொல்லும் ஹாட்ஸ்டார் நேஷனல் ஜியோக்ராஃபிக் டாக்குமெண்டரி என சிறு வயதுமுதல் இந்த நாள் வரை சிந்தைக்குள் சேர்ந்த எல்லாமும் சேர்ந்து என் கங்கைக் கனவுக்கு அடர்த்தி கூட்டிக்கொண்டே வந்தன.
இறைவன் அருளாலே அதற்கான அழைப்பும் வந்தது நாளும் வந்ததே.
வருணா எனும் நதி குறுக்காக பாயும் இடத்திலிருந்து, ‘அஸி கட்டம்’ எனப்படும் படித்துறை வரைக்குமான எல்லை வரையில் உள்ள ஊர் என்பதால் ‘வருணா + அஸி’ என்பது ‘வாராணசி’ என்று இந்தி, சமஸ்க்கிருதத்திலும், ‘வாரணாசி’ என்று தென்னிந்திய மொழிகளிலும் விளிக்கப்படும் ஊரை, பிரித்தானியர்கள் ஆங்கிலத்தில் ‘பனாரஸ்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இந்துமத புராணங்களிலும் பண்டைய காலங்களிலும் ‘காஷி’ என்று குறிப்பிடப்பட்டது, தமிழகத்தில் ‘காசி’ என்று சொல்லப்படுகிறது.
காசியில் கங்கை போற்றி வணங்கப்படுகிறாள். பிணங்கள் எரிக்கப்படும் ஹரிச்சந்திர கட்டம் படித்துறை (காட்), மணிகர்னிகா கட்டம், கேதார் கட்டம், ராஜா கட்டம் என 84 படித்துறைகளை கொண்டிருக்கிறது கங்கை இவ்வூரில்.
குறுக்கு நீண்ட கொள்ளிடத்தையும் பாலாற்றையும் நிறைய நகலெடுத்து அடுத்தடுத்து பரப்பி வைத்ததைப் போல என்று வாய்பிளந்த குழந்தைத்தனமான வியப்பே வந்தது அத்தனை பெரிய நீர்ப்பரப்பை ஒரேயோர் ஆறென்று பார்த்த போது.
‘எவன் வந்தாலும் எது வந்தாலும் அடிச்சித் தூக்கிருவேன்!’ என்பது போல பெரும் வேகமெடுத்து சுழித்து பாய்ந்து ஓடும் கடல் போல பரந்து விரிந்த ஓர் ஆற்றைப் பார்க்கையில் பொங்கிப் பெருகியது என் மகிழ்ச்சி.
‘மேல மழை பெய்து கங்கையில் வெள்ளம், இறங்கிக் குளிக்க அனுமதியில்லை. கங்கா ஆர்த்தியே நடக்குமா தெரியவில்லை!’ என்று இந்தியில் கவலைப்பட்டவர்களுக்கு நடுவே, ‘இப்படியொரு கொப்பளித்து ஓடும் சுழித்து ஓடும் வெள்ளத்தை இவ்வளவு தண்ணீரை பார்ப்பதே வாய்ப்புதானே!’ என்று துள்ளுகிறோம் நாம்.
‘என் நகரமான காசிக்கு ஈடு இணை மூன்று உலகங்களிலும் இல்லை!’ என்று சிவனே சொன்னதாக சொல்லப்படும் ஊரில், மூன்று உலகங்களிலும் பாயும் நதி என்று சொல்லப்படும் நதியின் முன்னே நிற்கிறேன். அசமஞ்சனின் மகன் பகீரதன் கொண்டு வந்தானாம் இந்நதியை. இதோ என் கண் முன்னால்.
‘எத்தனையெத்தனை குருமார்கள் நடந்த கரையில் போற்றிய நதியின் முன்னே நானும்!’
‘கங்கையே வணங்குகிறேன்!’
கங்கையில் இறங்கும் முன்னே பொங்கியோடிய என் மனப்பிரவாகம், கங்கையில் இறங்கியதிலிருந்து மாறிப்போனது. மணிக்கணக்கில் கங்கையிலேயே தீரத் தீர இருந்து விட்டு ஏறியவன் அதே சக்தி இருந்த போதும் அந்தியில் வேகங்குறைந்து தளர்ந்தவனைப் போல ஆகி விட்டேன்.
காசி விஸ்வநாதரைக் காண நடந்த போது என் கால்கள் வேகங்குறைந்திருந்தன.
கங்கை ஆழம், கங்கை அழகு, கங்கை அதிசயம், கங்கை அசகாய சக்தி, கங்கை ஆன்மீகம், கங்கை புராதனம், கங்கை நவீனம், கங்கை செழுமை, கங்கை வளமை, கங்கை செறிவு, கங்கை புனிதம், கங்கை வேகம், கங்கை பெரும் அகலம், கங்கை நீண்ட நெடிய காலத்தின் சாட்சி, கங்கை மாட்சி, கங்கை நம்பிக்கைகளின் நீட்சி, கங்கை கண்கொள்ளாக் காட்சி!
இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது கங்கை என்னுள்ளே தீராப் பெரு நதியாக.
:பெரு நதியைத் தேடி – 3
*- பரமன் பச்சைமுத்து*
கேதார் காட், கங்கை நதித் துறை, வாரணாசி
24.08.2024
#Gangai #Ganges #கங்கை #Varanasi #ParamanTouring #ParamanVaranasi #Kashi #Kasi #காசி #வாரணாசி #ParamanPachaimuthu #PeruNathiyaiThedi #சிவன் #LordShiva #பெருநதியைத்தேடி