பயணங்களே ஒரு மனிதனை வளர்த்தெடுக்கின்றன.
நூல்களைப் போலவே பயணங்களும் ஒரு மனிதனை ஒரே நேரத்தில் அகத்திற்கும் புறத்திற்கும் தயார் செய்கின்றன. நல்ல பயணங்களை கொண்டவன் பேறு பெற்றவன், நீண்ட நெடிய பயணங்களை கொண்டவன் நற்பேறு பெற்றவன்.
கிணற்றுத் தவளையாய் கிடக்கும் மனிதனை வெளியிலெடுத்து உலகத்திற்கு விரிவாக்கி உயிர்ப்பூட்டி விடுவது பயணங்களே.
பயணத்தின் ஊடே மனிதன் எதிர்கொள்ளும் நிலங்களும் மனிதர்களும் நிகழ்வுகளும் அவற்றின் வழியே பெறும் அனுபவங்களும் அவனை நிமிர்த்தி விரித்து உயர்த்தி விடுகின்றன.
‘அவனுக்கு நண்பர்களே இல்லை! அவன் உண்டு வேலை உண்டுன்னு இருப்பான்’ என்று சொல்லப்படுவோர்களும், மன அழுத்தத்தால் உள்ளேயே குமைந்து ஒரு தனி உலகத்தில் வாழ்பவர்களும் பயணங்களே கொள்ளாதவர்கள் என்பது என் எண்ணம்.
பயணங்கள் மனிதர்களை அவர்களின் சிறுமைகளை உடைத்து வெளியில் இழுத்து விட்டு பேருலகத்தை பேரண்டத்தை காட்டி காப்பாற்றுகிறது.
மனிதர்களை அதிகம் பார்த்தவன் மன அழுத்தம் கொள்ளுவதில்லை. ‘எத்தனை பெரிய உலகம், எத்தனை வாய்ப்புகள்… போவியா!?’ என்று எழுந்து நடக்கத் தொடங்குகிறான்.
பயணம் மனிதர்களோடு பழகக் கற்றுத் தருகிறது, அதே நேரத்தில் தன்னோடே தனியாக இருக்கக் கற்றுத் தருகிறது.
பயணங்கள் பல செய்தவனை வல்லவனாக்கி விடுகிறது வாழ்க்கை. அவன் எங்கும் எதிலும் பிழைப்பான், செழிப்பான்.
மணக்குடி கிராமத்திலிருந்து வயல் சூழ்ந்த மரங்களடர்ந்த வாய்க்கால் கரை சாலை வழியே நிதமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து நகரத்து பள்ளிக்கு கொண்ட பயணமே முதன் முதலில் எனக்கு உலகத்தையும் உலகத்துக்கு என்னையும் அறிமுகம் செய்து வைத்தது என்று தோன்றுகிறது இன்று.
நான் கொண்ட ஒரு பெங்களூரு பயணம் என் வாழ்வு மொத்தத்தையும் மாற்றி வேறோர் உலகத்தில் என்னை உந்தித் தள்ளி விட்டது.
பயணங்கள் மனிதனை மாற்றி உயர்த்திவிடுகின்றன. சில மனிதர்கள் கொண்ட சில பயணங்கள் உலகத்து மனிதர்களின் வாழ்வையே மாற்றி உயர்த்திவிடுகின்றன.
தென்னாப்பிரிக்காவில் பாரிஸ்டர் மோகன்தாஸ் கொண்ட ரயில் பயணம் அவரை மகாத்மா காந்தியாக மாற்றி இந்தியவிற்கு சுதந்திரம் தந்தது, உலகத்திற்கு அகிம்சை வழியைத் தந்தது.
( Contn.)
திரைகடல் ஓடியும் திரவியம் கொள்ளவதற்காக கொள்ளப்பட்ட ஒரு கடற்பயணம் காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகர் குலத் தலைவனை முற்றும் துறந்த மெய்ஞானியாக்கி மாற்றி உலகத்திற்கு பட்டினத்தாரை தந்தது.
காசியை நோக்கி கானகத்தின் வழியே செய்த ஆபத்து நிறைந்த ஒரு பயணமே காஞ்சிக்கு ராமானுஜரை காட்டியது, ராமானுஜருக்கு காஞ்சியை காட்டியது, ராமானுஜருக்கு அவருக்கான வழிகாட்டி வேடனைக் காட்டியது, உலகத்திற்கு விசிட்டாத்வைதம் கிட்டியது.
ஒரு பயணம் வாழ்வை மாற்றிவிடும். ஒவ்வொரு பயணமும் அந்த ஒரு பயணத்தைத் தேடித்தான்.
இப்போது புதுக்கோட்டையை நோக்கிப் பயணிக்கிறேன்.
-பரமன் பச்சைமுத்து
திருச்சி
07.06.2025
#ParamanLifeCoach #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanTouring #traveltheworld #பயணம் #புதுக்கோட்டை #Pudukkottai #Ramanujacharya #MahatmaGandhi #Pattinathar #பட்டினத்தார் #Manakkudi #Kizhmanakkudi #Depression #StressFree #Positivity #StayWithPositive