அலைவாய் போயிருக்கிறீர்களா?
சரி, சீரலைவாய் தெரியுமா?
தொல்காப்பியமே மிகவும் பழமையானது. அந்தப் பழந்தமிழ் தொல்காப்பியமே ஒரு கோவிலைக் குறிப்பிட்டால், அது எவ்வளவு பழமையாக இருக்கும்?
கடற்கரையிலிருந்து வெறும் 65மீ ஒரு கோவில், அது கூட பரவாயில்லை தரை மட்டத்திலிருந்து 10 அடி கீழேயும் கடல் மட்டத்திலிருந்து 15 அடி கீழேயும் கருவறை மூலவர் குகை, ஆனால் ஆயிரமாண்டுகளாக நீர் புகுந்ததில்லை. எந்த ஊர் தெரியுமா?
எல்லா ஊரிலும் கரையைத் தாண்டி வந்த சுனாமி, 65மீட்டரில் கடலையொட்டியிருந்த இந்த கோவிலை மட்டும் தொடாமல் விலகி உள்வாங்கிப் போனது.
…
ஸ்ரீவைகுண்டத்தின் சண்முக சிகாமணிக்கவிராயருக்கு பிறந்த குழந்தைக்கு வயது ஏறியும் பேச்சு வரவில்லை. ஐந்து வயது ஆகியும் பேச்சு வரவில்லை. வருத்தமும் ஏக்கமும் தாங்காமல் வண்டி கட்டிக்கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து அழுது அரற்றி முறையிட்டனர். அதன் பிறகு அந்தக் குழந்தைக்கு பேச்சு மட்டுமல்ல கந்தர் கலி வெண்பா பாடும் வல்லமையும் வந்தது. திருச்செந்தூர் முருகன் அருள்பெற்ற அந்தக் குழந்தையே வாரணாசியில் கங்கையாற்றங்கரையில் மறைந்த, பல நூல்கள் எழுதிய, சைவத்துக்கு தொண்டாற்றிய குமரகுருபரர் என்கிறது வரலாறு.
( குமரகுருபரர் உருவாக்கிய, வாழ்ந்து மறைந்த இடமான வாரணாசி கேதாரீஸ்வரர் மடத்தை சென்ற ஆண்டு அங்கிருந்தே படமெடுத்து பகிர்ந்திருந்தோம்)
அதிருக்கட்டும், ‘அலைவாய் என்றாயே பரமன், அது என்ன?’ என்குறீர்களா?
‘முருகன் தீம்புனல் அலைவாய்’ என்கிறது தொல்காப்பியம்.
‘சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்’ என்கிறது சிலப்பதிகாரம்.
‘அலைவாய்’ ‘சீரலைவாய்’ என்றெல்லாம் இலக்கியங்கள் குறிக்கும் ஊர் மன்னார் வளைகுடாவையொட்டி இருக்கும் நம் திருச்செந்தூர்தான்.
என் தந்தை மிக விரும்பி பாடிய பலருக்கும் பரிந்துரைத்த ‘விறல்மாறனைந்து’ திருப்புகழில்
// அழகான செம்பொன் மயில்மேலமர்ந்து ‘அலைவாய்’ உகந்த பெருமாளே! // என்று முடித்திருப்பார் அருணகிரிநாதர்.
இன்று அம்மாவுக்கு அனுபவம் தருவதற்காக அலைவாய் கந்தப் பெருமாளின் கோவிலுக்கு வந்தோம்.
ஆதி சங்கரரும், அருணகிரிநாதரும், சேர சோழ பாண்டியர்களும், ஆயிரமாண்டுகளாக அடியார்களும் அருளாளர்களும் வணங்கிய சன்னதியில் அம்மாவுடன் நாமும் வணங்கும் பேறு பெற்றோம்.
: அம்மா – ஆலய தரிசனம் – அறுபடை
– பரமன் பச்சைமுத்து
திருச்செந்தூர்
16.06.2025
#ParamanTouring #பரமன்பச்சைமுத்து #amirthampachaimuthu #ParamanPachaimuthu #arupadaiveedu #travel #ParamanLifeCoach #Alaivai #அலைவாய் #Thiruchendur #திருச்செந்தூர் #lordmurugan #திருப்புகழ் #Thirupugazh #Kumaraguruparar #Tholkappiyam