‘ஓர் உயிரினத்தை வழி நடத்தும் உள்ளுணர்வை அதற்கு எது தருகிறது?’ என்ற கேள்வி பெரும் வியப்பை தந்து கொண்டேயிருக்கிறது. மனித குலம் தொடர்ந்து எழுப்பிக் கொண்டேயிருக்கும் இந்த கேள்வி அறிவியல் புலத்திலும் ஆன்மீக புலத்திலும் வெளிச்சக் கீற்றுகளை காலங்காலமாக பாய்ச்சிக் கொண்டேயிருக்கிறது, வளர்ச்சி நடந்து கொண்டேயிருக்கிறது.
இந்தியாவின் மணிப்பூர் காடுகளிலிருந்து புறப்பட்ட அமூர் வகை வல்லூறு பங்களாதேஷுக்கு மேலாக பறந்து மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், தெலுங்கானா, கர்நாடகா, கோவா பகுதிகளை கடந்து பெரும் நீர்ப்பரப்பான அரபிக்கடலைக் கடந்து ஆப்பிரிக்காவின் மேல் நுழைந்து எத்தோப்பியா, சோமாலியா கடந்து கென்யாவை அடைந்திருக்கிறது வெறும் ஆறே நாட்களில்! 6 நாட்களில் 6100 கிமீ! இந்தியாவின் ஒரு முனையான காஷ்மீரத்திலிருந்து மறு கோடியான கன்னியாகுமரிக்குப் போய்விட்டு அப்படியே திரும்பி காஷ்மீரத்திற்கே வருவதற்கு ஆகும் தூரம்!
அந்த ஃபால்கன் பறவையின் முதுகில் சிறு ரேடார் ஒன்றை பொருத்தியிருந்ததால் இதை கண்டறிய முடிந்திருக்கிறது.
இயற்கையின் எந்தவோர் உயிரினத்தையும் அதனுள்ளே பொதிந்திருக்கும் அளப்பறிய ஆற்றலையும் குறைத்து மதிப்பிட முடியாது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர வளர, இயற்கையின் படைப்புகளின் உன்னதங்களை சான்றுகளோடு மேலும் மேலும் அறிந்து கொள்கிறோம்.
வெறும் 150 கிராம் எடையேயுள்ள, 10லிருந்து 12ஆண்டுகளில் பிறவியை முடித்துக் கொண்டு மாய்ந்து போகும் புறாவை விட சிறிய இந்தப் பறவை அத்தனைப் பெரிய பெருங்கடலை எங்கும் நிற்காமல் எப்படிக் கடக்கிறது? அத்தனை சிறிய பறவைக்குள் எத்தனை பெரிய ஆற்றல்!
இத்தனை தூரங்கள் கடந்து இந்த திசையில் இப்படி வலசை போவதற்கு இந்த சிறு பறவைக்கு அப்படியொரு உள்ளுணர்வைத் தருவது எது!
இயற்கையின் படைப்பின் பேரதிசயங்களை எண்ணிய வியப்பில் நிற்கிறேன்
– பரமன் பச்சைமுத்து
24.11.2025
#AmurFalcon #AmurFalconKenya #naturelovers #Nature #environment #இயற்கை #Godisgood #God #creature #ParamanPachaimuthu #பரமன்பச்சைமுத்து #ParamanLifeCoach

